மேற்கு வங்கத்தில் விஸ்வரூபமெடுக்கும் பாஜக... பின்வாங்குகிறாரா திரிணாமுல் அட்வைசர் பிரசாந்த் கிஷோர்?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவின் பலம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2016ஆம் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி எப்படிப் பல தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானித்தார்களோ, அதேபோல வங்கத்தில் இடதுசாரிகள் கூட்டணி வாங்கும் வாக்குகள் பல இடங்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கவுள்ளது.
மேற்கு வங்கத்தில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 27ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 26ஆம் தேதி வரை தேர்தல்கள் நடைபெறுகிறது,
வாக்கு எண்ணிக்கை மற்ற நான்கு மாநிலங்களுடன் சேர்ந்து மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன.
திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆளும் கட்சியாக உள்ளது. இதனால் வங்கத்தில் மம்தாவை வீழ்த்தி வெல்ல வேண்டும் என்ற தீவிர முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக வங்கம் இருந்தது. ஆனால், இப்போது இடதுசாரிகள் நிலை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால் இத்தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கை கோர்த்துள்ளன.
கூட்டணி எப்படி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட தனித்தே களமிறங்குகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மற்றவற்றில் திரிணாமுல் காங்கிரஸ் நேரடியாகக் களமிறங்குகிறது. அதேபோல இடதுசாரிகள் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 130 இடங்களிலும், காங்கிரஸ் 92 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகள் கூட்டணிக் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உத்வேகத்தில் பாஜக
கடந்த சில மாதங்களாகவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளதால், புது உத்வேகத்துடன் அக்கட்சி தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகிறது. குறிப்பாக, மம்தாவுக்கு வலதுகளுமாகத் திகழ்ந்த சுவேந்து அதிகாரி கடந்த சில மாதங்களுக்கு முன் அமித் ஷா முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். அவரது வருகை வங்கத்தின் தென் மாவட்டங்களில் கட்சிக்கு வலு சேர்க்கும் என நம்பப்படுகிறது. அதேபோல பிரபல வங்க மொழி நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் மிதுன் சக்கரவர்த்தி இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த பேரணியில் லட்ச கணக்கானவர்கள் திரண்டர். இது திரிணாமுல் காங்கிரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் சேலஞ்ச்
தமிழ்நாட்டில் எப்படி பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுக தேர்தலை எதிர்கொள்வதைப் போலவே, வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம், பாஜகவின் பலம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுவதாகவும் அக்கட்சி தேர்தலில் இரட்டை இலக்கில் கூட வெல்ல முடியாது என்றும் அப்படி நடந்தால் தான் தேர்தல் ஆலோசகராக இனி பணியாற்றப் போவதில்லை என்றும் ட்வீட் செய்திருந்தார்.
பாஜகவின் அசுர வளர்ச்சி
ஆனால். பாஜக தலைவர்களின் தொடர் வருகை, அக்கட்சி நிர்வாகிகள் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றுவது போன்ற காரணங்களால் பாஜகவின் செல்வாக்கு மேற்கு வங்கத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஏபிபி கருத்துக்கணிப்புகளிலும்கூட பாஜக 92 இடங்கள் முதல் 108 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்ற பாஜகவுக்கு இது மிகப் பெரிய எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.
பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்
பாஜகவின் இந்த திடீர் வளர்ச்சி பிரசாந்த் கிஷோரை கொஞ்சம் அசரடித்து விட்டது. வாக்குப்பதிவு நெருங்க நெருங்க பாஜக, தனது தேர்தல் பணிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ளும். இது அனைவரையும்விட பிரசாந்த் கிஷோருக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் தனது சேலன்ஞ்சை கொஞ்சம் மாற்றிக் கொண்டுவிட்டார். முதலில் பாஜக ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகளை வெல்லும் என தெரிவித்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜக மூன்று இலக்கத்தை எட்டிவிட்டால் தான் தேர்தல் ஆலோசகர் பணியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது இருக்கும் எதிர்ப்பு அலை ஒரு காரணமாக இருந்தாலும், பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணியும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக தேர்தல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தக் கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரியும் என்பதால், பாஜகவுக்கு இது சாதகமாக அமையும். தமிழ்நாட்டில் 2016ஆம் தேர்தலில் மக்கள் நலக்கூட்டநணி எப்படிப் பல தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானித்தார்களோ, அதேபோல வங்கத்தில் இடதுசாரிகள் கூட்டணி வாங்கும் வாக்குகள் பல இடங்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். இது பாஜகவுக்குச் சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.