திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநரின் சிறு தவறு.. வாங்காத வண்டிக்கு இஎம்ஐ கேட்டு எமனாகிய பைனான்ஸ் ஊழியர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் முருகன் என்பவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரை சந்தித்த டிராக்டர் ஷோரூம் ஊழியர்கள், ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி சென்றுள்ளார். அவர்கள் கேட்ட இடத்தில் கையெழுத்து எல்லாம் போட்டிருக்கிறார். ஆனால் தவணை அதிகமாக இருந்ததால் டிராக்டர் வேண்டாம் என்று வந்துவிட்டார். ஆனால் வாங்காத வாகனத்துக்கு தவணைத்தொகை கேட்டு, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால் ஆட்டோ டிரைவர் எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.
பலர் இஎம்ஐயில் வண்டி வாங்க ஆசைப்படுவார்கள். அவர்கள் கண்டிப்பாக அறியவேண்டிய கதை இது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த 58 வயதாகும் முருகன் என்பவர் சீத்தமரம் நால்ரோட்டில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அவருடைய மனைவி தவமணிக்கு 52 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

டிராக்டர் ஓட்டி சம்பாதிக்கலாம்
இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, திண்டுக்கல்லில் இருந்து வந்த டிராக்டர் ஷோரூமின் மார்க்கெட்டிங் ஊழியர்கள் முருகனை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள் ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதை விட, டிராக்டர் வாங்கி ஓட்டினால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள்.
டிராக்டர் வாங்க முடிவு
இதனை நம்பிய ஆட்டோடி டிரைவர் முருகன், டிராக்டர் வாங்க முடிவு செய்து திண்டுக்கல்லில் உள்ள டிராக்டர் ஷோரூமுக்கு சென்றார். அப்போது ஒரு டிராக்டரை முருகனிடம் காட்டினர். அதன் விலை, ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் என்று கூறினர். இது மட்டுமின்றி ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன முகவர்களிடமும் முருகனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.
32 கையெழுத்து
அவர்கள் டிராக்டர் வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை கடனாக தருவதாக கூறியிருக்கிறார்கள்.. மேலும் தாங்கள் வைத்திருந்த ஆவணங்களில் முருகனிடம் 32 கையெழுத்துகளை வாங்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு முருகன் ஊருக்கு வந்து விட்டார். ஒரு மாதம் கழித்து மீண்டும் திண்டுக்கல்லில் உள்ள அந்த டிராக்டர் ஷோரூமுக்கு வந்தார். அப்போது தொழில் போட்டி அதிகமாக இருப்பதால், நிதி நிறுவனத்தில் கடனுக்கு டிராக்டரை வாங்கி ஓட்டி தன்னால் தவணைத்தொகை கட்ட முடியாது என்று அவர் கூறினாராம். மேலும் தனக்கு டிராக்டர் வேண்டாம் என்று கூறி விட்டு முருகன் வந்து விட்டார்.
இஎம்ஐ கட்ட சொல்லி வற்புறுத்தல்
அதன்பிறகு தன் வேலையை பார்த்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி நிம்மதியாக அவர் வாழ்ந்து வந்தார். அதன்பிறகு தான் அவரரது வாழ்க்கையில் இஎம்ஐ ரூபத்தில் புயல் வீசியது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் முருகனை சந்தித்துள்ளனர். நீங்கள் டிராக்டர் எடுத்ததற்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்ட வேண்டிய தொகை ரூ.58 ஆயிரத்து 500-ஐ கட்டவில்லை. எனவே உடனடியாக தவணைத்தொகையை கட்டுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக்கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
டிராக்டர் எடுக்கவே இல்லை
தான் டிராக்டரே எடுக்கவில்லையே, எதற்காக பணம் கட்ட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் அவர்கள் டிராக்டர் எடுத்துவிட்டு தவணைத்தொகை கட்டவில்லை என்று கூறியபடி சென்று விட்டார்களாம். இதனால் முருகன் குழப்பம் அடைந்தார். இதற்கிடையே தவணைத்தொகை செலுத்தக்கோரி முருகனை நேரிலும், போன் மூலமாகவும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி தொல்லை கொடுத்தனர். நேற்று காலை சவாரிக்காக ஆட்டோவில் முருகன் அமர்ந்திருந்தார்.
முருகனுக்கு வந்த போன்
அப்போது, முருகனுக்கு தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் போன் செய்தார். எதிர்முனையில் பேசிய அந்த ஊழியர், முருகனை தரக்குறைவான வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மகள், மருமகளை பற்றி தகாத வார்த்தையால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் வாங்காத வாகனத்துக்கு தவணைத்தொகை கேட்டு தொல்லை கொடுக்கும் நிதி நிறுவன ஊழியர்களால் விரக்தி அடைந்தார் முருகன்.
அவசரப்பட்டு முடிவு
வருத்தத்தில் இருந்த முருகன் பூச்சி மருந்தை வாங்கி ஆட்டோவில் வைத்தே குடித்தார். சிறிதுநேரத்தில் முருகன் மயக்கம் அடைந்தார். இதனைக்கண்ட சக ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோ டிரைவர் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வாங்காத வண்டிக்கு இஎம்ஐ கட்ட சொன்னதற்கு காரணம் அவர் போட்ட கையெழுத்து தான் என சொல்லப்படுகிறது.
கையெழுத்து போடக்கூடாது
டிராக்டர் வாங்குவதாக கையெழுத்து போட்டவர். ஒரு மாதம் கழித்து வேண்டாம் என்று முருகன் கூறியிருக்கிறார். ஆனால் பைனான்ஸ் ஊழியர்கள் அவரது தலையில் கடனை கட்டி இஎம்ஐ கட்ட சொல்லியிருக்கிறார். நிறுவனமும், பைனான்ஸ் நிறுவனமும் இதை கவனித்து இருந்தால் ஆட்டோ டிரைவர் இன்று உயிருடன் இருந்திருப்பார். அதேபோல் முருகனும் காட்டும் ஆவணங்களில் கையெழுத்திடாமல் இருந்திருந்தாலும் சிக்கல் இல்லை என்கிறார்கள் சில ஊர் மக்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications