இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் 20 நாளில் தற்கொலை! எப்படி மனசு வந்தது? திண்டுக்கல் அருகே துயரம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் 20 நாளில் தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாலுக்காக இரண்டு பச்சிளங்குழந்தைகளும் கத்தி கதறியது காண்போரை கண் கலங்கச் செய்திருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் நிர்கதியாக விட்டுவிட்டு அந்தப் பெண் தற்கொலை முடிவை நாடியதற்கு அவரது கணவனே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோமுக கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கவுரி. இவருக்கு வயது 22. இந்நிலையில் கவுரிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன் பலனாக 20 நாட்களுக்கு முன்னர் கவுரி -சிவக்குமார் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று என அழகான இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இதனிடையே குழந்தை பெற்றெடுத்த பேறுகால களைப்பு தீர்வதற்குள் மனைவி கவுரியிடம் சிவக்குமார் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார். இன்று காலை கூட கவுரியை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு சிவக்குமார் வெளியே சென்றிருக்கிறார். இதனால் மனமுடைந்த கவுரி தனது இரட்டை குழந்தைகளை விட்டு விட்டு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகளும் மாறி மாறி கத்தி கதறியபடி அழுததால் அருகாமையில் இருந்தவர்கள் கவுரி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது வீட்டில் கவுரியை காணாதவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிய போது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார் கவுரி. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிகப்பட்டு அவர்கள் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுரிக்கும் சிவக்குமாருக்கும் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதை போல் ஆத்திரத்தில் பேசிய பேச்சால் மனைவியை பறிகொடுத்ததோடு தனது இரண்டு இரட்டை குழந்தைகளையும் தாய் இல்லாத பிள்ளைகளாக ஆக்கிவிட்டார் சிவக்குமார். இதனிடையே பாலுக்காக இரண்டு பச்சிளங்குழந்தைகளும் கத்தி கதறியது காண்போரை கலங்க வைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications