விடிய விடிய சடலத்துடன்..காலையில் டீ குடிக்கப் போன ஜெயனுல்லா! காத்திருந்த அதிர்ச்சி! ஷாக் திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு வேறு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் கொலை செய்துவிட்டு விடிய விடிய சடலத்துடன் இருந்த அவர் காலையில் டீ குடிக்க போய்விட்டு, பின்னர் தனது மனைவியை யாரோ கொலை செய்ததாக நாடகமாடி, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் பேகம்பூர் அருகே பிஸ்மி நகரை சேர்ந்தவர் ஜெயனுல்லா சுப்தீன் (வயது 70). இவர் திண்டுக்கல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகமதா பீவி (54). இந்த தம்பதிக்கு சௌதாபானு (35) என்ற மகள் உள்ளார்.

இவருக்கு திருமணமாகி கணவர் ஷேக்பரீத் என்பவருடன் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள பர்மா காலணியில் வசித்து வருகிறார். இதனால் பிஸ்மி நகரில் உள்ள வீட்டில் ஜெயனுல்லா சுப்தீன் மற்றும் அவரது மனைவி முகமதாபீவி ஆகிய 2 பேர் மட்டும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி 2 பேரும் வழக்கம்போல் அவர்களது வீட்டில் சாப்பிட்டு அயர்ந்து தூங்கினர். பின்னர் நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் ஜெயினுல்லா விழித்தெழுந்து வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் சுமார் 6:00 மணி அளவில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரது மனைவி தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர். மூதாட்டி படுகொலை பின்னர் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தலையில் கல்லை போட்டு மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் மூதாட்டியின் கொலைக்கான காரணம் குறித்து கணவர் ஜெய்னுல்லாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் ஜெயினுல்லாவோ தனது மனைவியை யாரோ கொலை செய்து விட்டார்கள் என அழுது புலம்பினார். ஒரு கட்டத்தில் அவர் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதை அடுத்து அவரை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த போது தான் மனைவியை கொலை செய்துவிட்டு அவர் நாடகமாடியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்," கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முகமதா பீவியின் நகையை வாங்கி ஜெய்னுல்லா அவரது உறவினருக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் முகமதா பீவி தனது நகையை கேட்டு ஜெயினுல்லாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயனுல்லா முகமதாபீவி தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வீட்டிற்குள் அவரது மனைவி சடலத்துடனே இருந்துவிட்டு நேற்று அதிகாலை எப்பொழுதும் போதும் சுமார் 4.45 மணிக்கு அருகிலுள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். பின்னர் 6 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து பார்த்து மனைவியை கொலை செய்துவிட்டனர் என கதறி அழுது நாடகம் ஆடியது தெரியவந்தது.
இந்த நிலையில் முகமதா பிவீயின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நேற்று முன்தினம் இரவு 1 முதல் 3 மணிக்குள் முகமதா பீவி இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தியதில் ஜெயனுல்லா மனைவி முகமதா பீவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஜெயனுல்லாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications