எலக்சனுக்காக எடப்பாடியின் ’பெரிய’ வேலை..வீட்டுக்கு போகத் தயாராகும் ஸ்டாலின்! நத்தம் விஸ்வநாதன் பளிச்
திண்டுக்கல்: திமுக ஆட்சி மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர் எனவும், அதனை திசை திருப்புவதற்காக பல்வேறு போலி நாடகங்களை திமுக கையாள்கிறது எனவும், 2026ல் ஸ்டாலின் வீட்டிற்கு போவது உறுதி, எடப்பாடியார் கோட்டைக்கு போவது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," தேர்தல் எப்பொழுது வரும் எப்பொழுது வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில் கிட்டத்தட்ட தேர்தல் காலம் நெருங்கிவிட்டது. 2026 தேர்தலுக்கு இப்பொழுதே கழக நிர்வாகிகள் தங்களது பணிகளை துவக்கி விட்டனர்.

எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலுக்காக பல்வேறு பணிகளை தற்போதிருந்தே துரிதமாக மேற்கொண்டு வருகின்றார். நிர்வாகிகள் ஓய்வறியாது உழைப்பாளியாக மாறியாக வேண்டும். பூத் கமிட்டி வாக்குச்சாவடி போன்ற கழகப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து திறம்பட செயல்பட்டு களம் காண வேண்டும். பூத் கமிட்டி அமைக்கும் பணியை தலைமை கழக நிர்வாகிகள் நேரில் சென்று களப்பணி ஆற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு கழக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏறத்தாழ தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டது. அண்ணா திமுக தொண்டன் தேர்தலில் பணியில் இறங்கி விட்டால் அந்தப் பணிக்கு எந்த கட்சி தொண்டனாலும் ஈடு கொடுக்க முடியாது. விரைவில் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் தொகுதி வாரியாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நிலக்கோட்டை தொகுதியை கோடி கோடியாக இறைத்து கழகத்தின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிக்க திமுக முயல்கிறது.
அவர்களால் அது முடியவே முடியாது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கழகத்தின் கோட்டையாகும். இரட்டை இலையின் கோட்டையாகும். கழகத்தின் எஃகு கோட்டையை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. திமுக என்ன அவதாரம் எடுத்தாலும் கழகத்தின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது.
தமிழகத்தில் தேர்தல் இப்பொழுதே வந்தாலும் கழகம் மகத்தான வெற்றியைப் பெறும். அதே வேளையில் தேர்தல் எப்பொழுது வரும் திமுகவை ஒழித்தே தீர வேண்டும் திமுக தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது என மக்களின் எண்ணங்களாக உள்ளது.
அந்த அளவிற்கு மக்களின் வெறுப்பை திமுக ஆட்சியாளர் பெற்றுள்ளனர். இந்த வெறுப்பை திசை திருப்புவதற்காக பல பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் ஆட்சிக்கு எதிராக உள்ளதால் அதனை திசை திருப்புவதற்காக புதிது புதிதாக பிரச்சனையைக் கிளப்பி நாடகம் ஆடுகின்றனர். இந்தி பிரச்சனை மாநில சுயாட்சி பிரச்சனை போன்றவை காலங்காலமாக உள்ளது. ஏதோ இன்றைக்கு முளைத்தது போல அதனை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
திமுக ஆட்சியில் இல்லாத போது தான் இது போன்ற பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள். தற்பொழுது ஆட்சியில் உள்ள போதே இந்த பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்து உள்ளனர். காரணம் அந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி பன்மடங்கு உயர்வு, எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை போன்றவை தலைவிரித்து ஆடுகிறது. தமிழகம் வளர்ச்சி பணிகளில் பின் தங்கி உள்ளது. கழக ஆட்சியின் போது ஐந்தரை லட்சம் கோடிதான் கடன் சுமை இருந்தது. ஆனால் தற்பொழுது 10 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை உயர்த்தி உள்ளனர்.
கடந்த முறை திமுக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றால் அதற்கு மின்வெட்டே காரணம் என அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். அதே போல தற்பொழுது திமுக ஆட்சி அகல போகிறது என்றால் அதற்கு திமுக ஆட்சி தான் காரணம். அந்த அளவிற்கு மக்கள் வெறுப்பை திமுக ஆட்சியாளர்கள் சம்பாதித்து உள்ளனர். வெகுஜன விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்சி முடிவதற்குள் பல திமுக அமைச்சர்கள் தங்களது பதவியை இழந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள் போல. தங்கள் பதவி காலத்திலேயே பல வழக்குகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர். இது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஸ்டாலினின் ஆட்சி இந்த மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications