வெள்ளம், புயலால் பயிர் சேதம் ஏற்பட்டால் கவலை வேண்டாம்! விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு! என்ன?
திண்டுக்கல்: சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் விவசாயிகள் நெல் -II, மக்காச்சோளம் - III, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி - III பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” விவசாயிகளுக்கு எதிர்பாராமல் எற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் சிறப்பு மற்றும் ராபி பருவமாக நெல் -11. மக்காச்சோளம் III. சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி III பயிர்களில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டு இத்திட்டத்தினை திண்டுக்கல் மாவட்டத்தில் SBI General Insurance Company Ltd., நிறுவனமானது செயல்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் மொத்தமாக 163 குறு வட்டங்கள் பயிர் காப்பீட்டு பதிவிற்காக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம்
சிறப்பு மற்றும் ராபி பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர்வாரியான அடங்கலுடன் பயிர் காப்பீடு பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்- II. சோளம் மற்றும் நிலக்கடலை பயிரானது 16.12.2024-ம் தேதியும், மக்காச்சோளம்-III மற்றும் பருத்தி- III பயிர்களுக்கு 30.11.2024-ம் தேதியும், பயிர் காப்பீட்டிற்கான பதிவுகள் மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.
பயிர் காப்பீட்டு தொகையாகநெல் || பயிருக்கு காப்பீட்டு தொகை (ஏக்கருக்கு) ரூ.35,600, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமிய தொகை ரூ .534. சோளம் பயிருக்கு காப்பீட்டு தொகை (ஏக்கருக்கு) ரூ.11,000. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமிய தொகை ரூ .165. மக்காச்சோளம் III பயிருக்கு காப்பீட்டு தொகை (ஏக்கருக்கு ரூ.30,000, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமிய தொகை ரூ.450. நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டு தொகை(ஏக்கருக்கு) ரூ.26,500. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமிய தொகை ரூ .397. பருத்தி III பயிருக்கு காப்பீட்டு தொகை (ஏக்கருக்கு) ரூ.17,731.17. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமிய தொகை ரூ.886.56 ஆகும்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம். கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும், பொது சேவை மையங்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications