பல்கலையில் பாஜக ஆதரவு பிரச்சாரம்..தனியாக குரூப் ஆரம்பித்த பேராசிரியர்! பறந்த புகார்..பாய்ந்த நடவடிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மாணவர்களை தவறாக வழி நடத்தியதாக கூறி மாணவர்கள் புகார் அளித்த நிலையில், பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலிமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பெற முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 மாதம் மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்பு, 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பு என 36 வகையான தொழில் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வேளான் சார்ந்த படிப்புகளுக்கும், சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மாணவர்களை தவறாக வழி நடத்தியதாக கூறி மாணவர்கள் புகார் அளித்த நிலையில், பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக சுகாதாரத் துறையில் பேராசிரியராக ரங்கநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு (PGDSI) பாடம் எடுப்பதற்கு பதிலாக அவர் ஒரு கட்சிக்காரர் போல் அரசியல்வாதி போல் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து மாணவர்கள் மத்தியில் பேசி வந்துள்ளார். மேலும், அவரே ஒரு வாட்ஸ் அப் குரூப் குழு ஆரம்பித்து அதில் கட்சி மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் புதிய கல்விக் கொள்கை சமஸ்கிருதம் படிக்க வேண்டும் எனவும் மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் பலமுறை புகார்கள் அளித்தும் பல்கலைக்கழகம் இவர் மீது எந்த நடவடிக்கும் எடுக்காமல் உள்ளதாகவும், தற்பொழுது பயிலும் மாணவர்கள் மத்தியிலும் இவர் இதே போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் இது சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை எனவும், நீங்கள் என்ன என் மீது கூறினாலும் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என மாணவர்களை மிரட்டுவதாகவும் மாணவர்கள் மத்தியில் இருந்து தகவல்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன.

இதற்கிடையே வகுப்பறையில் மாணவர்கள் தங்களை தவறாக வழி நடத்துவதாக கூறியும், சமூக வலைதளங்களில் தவறாக பரப்பவதாக கூறியும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் எழுந்தது. தொடர்ந்து துணைவேந்தர் பஞ்சநதம் பேராசிரியர் ரங்கநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணை அடிப்படையில் பேராசிரியர் ரங்கநாதர் மாணவர்களை தவறாக வழி நடத்தியது தெரியவந்தது. இதை அடுத்து பேராசிரியர் ரங்கநாதனை ஆறு மாதம் விருப்ப ஓய்வில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.











Click it and Unblock the Notifications