நேருக்கு நேர் வரப்போகிறார்கள்.. என்ன நடக்குமோ? கிளம்பி வரும் ஆளுநர் ரவி.. ஸ்டாலின் ரியாக்சன் என்ன?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நாளை நடக்க உள்ள நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர். என் ரவியும் ஒரே மேடையில் தோன்ற உள்ளார்கள். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார்.
முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன.

ஆளுநர் ரவி
ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டு உள்ள சட்ட ரீதியான இந்த பணியை செய்யவில்லை என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம் விமர்சனம் வைத்து உள்ளன. இது போக இன்னொரு பக்கம் ஆளுநர் தமிழ்நாடு பாஜக தலைவர் போல செயல்படுகிறார் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சனம் வைத்து உள்ளன. அதாவது பாஜக தலைவர் போல ஆளுநர் தினசரி கருத்துக்களை வைக்கிறார். மத ரீதியாக பேசுகிறார்.

ஸ்டாலின்
நியமன பொறுப்பில் இருக்கும் அவர் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். ஆனால் ஆளுநர் ரவி அப்படி செய்வது இல்லை.மாறாக அவர் எதோ கட்சி கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுகிறார் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக, கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து உள்ளன.

நீக்க வேண்டும்
அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து 40 எம்பிக்களின் கையெழுத்தை திமுக பெற்றுள்ளது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர். இதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கோரிக்கை என்ன?
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர். என் ரவியும் இந்த சம்பவத்திற்கு பின் முதல்முறை நேரில் சந்தித்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். இதில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர். என் ரவி பங்கேற்க உள்ளார்.

சந்திப்பு
முதல்வரை பல்கலைக்கழக வேந்தராக நியமித்து தமிழ்நாடு அரசு அவசர இயற்றி இருந்தாலும் இன்னும் அந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. இதனால் ஆளுநர் ஆர். என் ரவி நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார். இதில்தான் முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ஆர். என் ரவி இருவரும் சந்தித்துக்கொள்வார்கள். இதற்காக இன்று இரவே ஆளுநர் ரவி திண்டுக்கல்லுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இன்று இரவு கோவையில் இருந்து திண்டுக்கல் செல்வார். இவர்கள் இருவரும் சந்திக்கும் பட்சத்தில், அவர்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும், இயல்பாக பேசிக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications