சின்னதாய் ஒரு ஐடியா.. வேலைக்கே போகாமல் 48 லட்சம் சம்பாதித்த ஓசூர் இளைஞர்.. ஏமாந்த திண்டுக்கல் பெண்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த வேளாங்கண்ணி பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட தொடர்பு கொள்ளும் படி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை நம்பி திண்டுக்கல் வேளாங்கண்ணி 48 லட்சம் வரை ஓசூர் இளைஞரிடம் கொடுத்து ஏமாந்துள்ளார்.
இன்றைக்கு பலருக்கும் விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசையை முதலீடாக கொண்டு பலர் ஏமாற்றி கோடிகளை, லட்சங்களை சம்பாதிக்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிக வட்டி கிடைக்க வேண்டும். ஒரு லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்க வேண்டும், ஆன்லைன் முதலீட்டில் கோடிகளை குவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பெரிய அளவில் ஏமாந்து போகிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஏமாந்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த 30 வயதாகும் வேளாங்கண்ணி என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட தொடர்பு கொள்ளும்படி கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே அதில் குறிப்பிட்ட எண்ணுக்கு வேளாங்கண்ணி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும், ஆன்லைனில் வணிகம் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பயிற்சி அளிப்பதாகவும் ஆசை வார்த்தைகளுடன் எதிர்முனையில் பேசியவர் கூறியிருக்கிறார்.. இதையடுத்து ஆன்லைன் வணிகம் தொடர்பான பயிற்சியில் சேர்ந்தார்.
அப்போது அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக வாட்ஸ்-அப் வீடியோ, ஆடியோ அழைப்புகளில் வந்து சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பயிற்சி முடிந்ததும் பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்படி கூறினர். அதை நம்பி அவரும், பல்வேறு தவணைகளாக ரூ.48 லட்சம் செலுத்தி ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டாராம்.
ஆனால் அவருக்கு லாபத்தொகை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப பெற முயன்ற போது முடியவில்லை. மேலும் அவருடன் பேசிய நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின்னரே தான் மோசடி செய்யப்பட்டதை அவர் உணர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக, வேளாக்கண்ணி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து எஸ்பி பிரதீப் உத்தரவின்பேரில் டிஎஸ்பி தெய்வம் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, சப்-இன்ஸ்பெக்டர் லாயிடுசிங் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 5 பேர் கும்பல் வேளாங்கண்ணியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த குமரேசன் (29) என்பவரை கைது செய்தனர். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்துவதாக கூறி, 10 வங்கி கணக்குகளை தொடங்கி இருக்கிறார். அந்த வங்கி கணக்குகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் 4 பேரை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications