முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்!
மதுரை: நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதல் தீவிரவாதி ஒரு இந்து என தான் கூறியது சரித்திர உண்மை என மீண்டும் உறுதியாக கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி காவல் நிலையத்திலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
கமலின் பேச்சைக் கண்டித்து அவருக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டிற்கும் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!
இன்று பிரச்சாரம்
அதே நேரத்தில் கடந்த 2 நாட்களாக நடிகர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களும் பாதுகாப்பு காரணம் கருதி ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று திட்டமிட்டப்படி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.
மதுரைக்கு புறப்பாடு
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக கொடைக்கானலில் இன்று இருந்து மதுரைக்கு கமல்ஹாசன் சென்றார்.
சரித்திர உண்மை
மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கோட்சே குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த அவர், நான் பேசியது சரித்திர உண்மை. முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை. உண்மையே வெல்லும் என்றார்.