பெண்களுக்கான மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவது எப்போது?.. அமைச்சர் பெரியசாமி தகவல்
பெண்களுக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ 1000 எப்போது வழங்கப்படும் - அமைச்சர் தகவல்
திண்டுக்கல்: பெண்களுக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ 1000 எப்போது வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. அந்த வகையில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ 4000 உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
பெட்ரோல் விலை குறைப்பு உடனடியாக அறிவிக்காவிட்டாலும் 2022- 2023 தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

நீட் தேர்வு
அது போல் நீட் தேர்வு ரத்து, டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை உள்ளிடட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் ரூ 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

85 சதவீதம்
ஆனால் தமிழக அரசோ தற்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் வரை செய்து முடித்துவிட்டோம். மீதமுள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக செய்தி முடித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையும் நடத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆலோசனை குழுவுடன் ஆலோசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த கூட்டத்தில் யார் யார் பயன் அடையலாம் என்ற விவரங்களை சேகரித்து முதல்வரிடம் சமர்ப்பித்திருந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி பி.எச்.எச். என்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக் கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோ தயா அன்னயோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ.1000 கிடைக்கும் என தெரிகிறது.

கணவர்களின் ஆண்டு வருமானம்
இதற்கு கணவன்மார்களின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு இந்த ரூ 1000 வழங்கப்படாது. அது போல் புதுமைப் பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி மாணவிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தாய்கள் இதில் பயனடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இந்த திட்டம் கருணாநிதி பிறந்தநாள் அன்று தொடங்கும் என தெரிகிறது.

அமைச்சர் பெரியசாமி
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ஐ பெரியசாமி, கோட்டூர், ஆவாரம்பட்டியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது அமைச்சர் பேசுகையில் வரும் 20 ஆம் ஆண்டு தொடங்கும் தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் மாதம் ரூ 1000 திட்டத்தை அறிவிக்கவுள்ளார். இந்த அறிவிப்பு வந்ததும் கணக்கெடுப்பு முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு ரூ 1000 வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைவர் என அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications