பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீமான், திருமா! விரும்பாவிட்டாலும் சரியான பாடம்! சிபி ராதாகிருஷ்ணன் அதிரடி
திண்டுக்கல்: திருமாவளவன், சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும், வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத நாடி பாகிஸ்தான் எனவும், நாட்டின் மீதான தாக்குதலை கண்டிக்க கூட தமிழக தலைவர்கள் விரும்பவில்லை என மகாராஷ்டிரா மாநில ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக சிந்து நதிநீரை தடுக்க கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான தொல் திருமாவளவனும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கக் கூடாது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீமான் திருமாவளவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என கூறியிருக்கிறார் மகாராஷ்டிரா மாநில ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணன். திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மீக கருத்தரங்கம் இன்று 27.04.25 மாலை நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு முதன்மை விருந்தினராக மகாராஷ்டிரா மாநிலம் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்," ஜம்மு காஷ்மீரில் 28 நபர்கள் கொல்லப்படுகிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள youtubeபர்கள் உண்மைகளை பேச வேண்டாமா? ஒருவர் இது திட்டமிட்ட சதி எனக் கூறுகிறார். யார் திட்டமிட்ட சதி பாகிஸ்தானியர்கள் என கூறுவதற்கு கூட மனம் இல்லாமல் இருக்கிறார்கள். 28 பேர் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக சிந்து நதிநீரை நிறுத்தலாமா என கேள்வி எழுப்புகின்றனர்? நான் கூறுகிறேன் தயக்கம் இல்லாமல் பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீரை தந்து கொண்டு இருந்தோம்.
அதை குடித்துவிட்டு துப்பாக்கியை எடுத்து வந்து எங்களது சகோதரர்களே துப்பாக்கி முனையில் மிரட்டி 28 நபர்களைக் கொன்று உள்ளீர்கள். அதுவும் மனைவியின் கண் முன்னே கணவர்கள் கொல்லப்பட்டதையும், அதிலும் கடற்படை சார்ந்த அதிகாரி திருமணம் முடித்து தேன்நிலவிற்கு சென்றவரை அவரது மனைவியின் கண் முன்னே கொன்று உள்ளீர்கள். இதைவிட கொடூரம் உலகத்தில் உண்டா என்பதை நினைத்துக் பாருங்கள்.
இதை கண்டிக்கக் கூட மனம் இல்லாமல் இருக்கும் தலைவர்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். எங்கே என்று கேட்டால் வீரம் விளைந்த நமது தமிழ்நாட்டில் என்பதுதான் வேதனைக்குரியது.
காஷ்மீர் தாக்குதல் சம்பந்தமாக திருமாவளவன் பேசியுள்ளார். என்ன செய்யலாம் என திருமாவளவன் அவர்களிடம் கேளுங்கள். தீவிரவாதிகள் நமது மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். மனைவியின் கண் முன்னே கணவர்கள் கொல்லப்படுகின்றனர். சகோதரி செல்கிறாள் என்னையும் சுட்டு கொன்று விட்டுப் போ என்றதற்கு இங்கு நடந்ததை மோடியிடம் சென்று சொல்ல என்று கூறிவிட்டு செல்கிறான். இதன் பின்பும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினால் எதற்கு நடவடிக்கை எடுக்கலாம்?
வாக்கு வங்கி பலப்படும் என திருமாவளவன் நினைக்கிறார். காலச்சக்கரம் எப்பொழுதும் ஒரே மாதிரி சுற்றாது. தவறுகளை திரும்பத் திரும்ப செய்து வெற்றி கொள்ளலாம் என்று யார் நினைத்தாலும் தாழ்ந்து போவது உறுதி இது போன்ற பேச்சுகள் எல்லாம் தோல்வி நிச்சயம் என்று நான் கருதுகிறேன். இதே உச்சநீதிமன்றம் தான் சொல்லியது. கேரளா ஆளுநருக்கு பரிபூரணமான அதிகாரம் உள்ளது. துணைவேந்தர்களை நியமனம் செய்வது என்பது கவர்னர் முழுமையான உரிமை என்று சொன்னதும் உச்ச நீதிமன்றம்தான் இரண்டு தீர்ப்புகளை கூறியுள்ளனர்.
சட்ட வல்லுனர்களைக் கொண்டு இதுபோன்ற மோதல்கள் ஏற்படாமல் தடுப்பதுதான் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என கருதுகிறேன். யாரெல்லாம் திண்டுக்கல் மலை கோட்டை மீது சென்று இருக்கிறார்களோ? அவர்களுக்கு எல்லாம் புரியும். இந்து தெய்வங்களை வைப்பது தான் நியாயம், தர்மம், நிதி என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு யாரும் பெரிய சான்றுகளை தேடி அலைய வேண்டியது இல்லை. அபிராமி அம்மன் சிலை மலைக்கோட்டை மீது வைக்கப்பட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தல் என்பதை நாங்கள் நிச்சயமாக செய்வோம். ஜனநாயகத்தில் சட்டத்தை நம் கையில் எடுத்துக் கொள்வது என்பது சரியாக இருக்காது. சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தீவிரவாதிகள் சதி திட்டம் எத்தனையோ முறை, முறியடிக்கப்பட்டுள்ளது. முறியடிக்கும் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஒருமுறை அதிர்ஷ்டம் கிடைத்தால் போதும். ஆனால், கால சரித்திர வரலாற்றிலிருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக் கொள்ளாத நாடு பாகிஸ்தான். தற்போது நடந்த தீவிரவாத செயலுக்கு பாகிஸ்தான் மிகச் சரியான பாடத்தை கற்றுக் கொள்ளும். திருமாவளவன் சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications