பழனி முருகா நீயே கேளுப்பா! துடைத்து எறியப்பட்ட அடிவாரம்.. ஜாலியாகக் கல்லா கட்டும் அறநிலைய அதிகாரிகள்
திண்டுக்கல்: உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அடிவாரப்பகுதியை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து மலையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் முற்றிலும் அகற்றப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் பழனி முருகன் சன்னதி அருகிலேயே கடை போட்டு முருகன் படங்களை விற்று வருகின்றனர். இதனால் பக்தர்கள் சிரமத்தை சந்தித்துள்ள நிலையில், அமைச்சர் அறிவுருத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

இந்நிலையில் தற்போது தைப் பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர்.
இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக வழக்கமாக தைப்பூச பண்டிகையை முன்னிட்டு பழனி மலையை சுற்றியுள்ள அடிவாரப் பகுதிகளில் அதிக அளவு பக்தர்கள் திரள்வார்கள். இதை அடுத்து அடிவாரத்தை சுற்றியும் வியாபாரம் களைகட்டும். கடன் வாங்கி கூட சில சிறிய அளவில் தொடங்கி, பெரிய அளவில் சாமி படங்கள், சுவாமி கயிறு, பிரசாதக் கடைகள், ஃபேன்சி கடைகள், உணவகங்கள், குளிர்பான கடைகள், பொம்மை விற்பனை கடைகள் ஆகியவற்றை அமைப்பார்கள்.

ஆனால் அதிகப்படியான கூட்டம் காரணமாக அடிவாரப் பகுதிகளில் நெரிசல் ஏற்படுவது உண்டு. குறிப்பாக காவடி எடுத்தும், அழகு குத்தியும் பக்தர்கள் வரும் நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடிவாரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது எனவும், அவற்றை அகற்ற வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு பக்தர்களுக்கு சிரமமின்றி கடைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், அந்த குழு கடைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டுமென பரிந்துரைத்தது. இதனை அடுத்து கடந்த ஜனவரி 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்பைட், பழனி அடிவாரப் பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வந்த 130 வீடுகளும் அகற்றப்பட்டது. மேலும் 156 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோவில் சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு மூலம் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது சில இடங்களில் பஞ்சாமிர்த கடைகள் மட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் அமைக்கப்பட்டிருக்கிறது இதனால் அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்த நிலையில் அடிவாரம் பகுதி காலியான கிரிக்கெட் மைதானம் போலவே காலியாக காட்சி அளித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் தங்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர் அடிவாரப் பகுதிகளில் கடை அமைத்திருந்த வியாபாரிகள்.
கொடைக்கானல் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் ஆனால் பழனி போன்ற கோவில் நகரங்களில் கார்த்திகை ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாட்களில் ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே பக்தர்கள் வருகை இருக்கும். ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு சிரமம் இருப்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம். ஆனால் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அளித்திருந்தால், நாங்களே பக்தர்களுக்கு சிரமமின்றி வியாபாரத்தையும் கவனித்து எங்கள் வாழ்வாதாரத்தையும் காத்திருப்போம்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்ததன் காரணமாகவே தற்போது நாங்கள் கடைகளை காலி செய்துள்ளோம் என கூறுகின்றனர். இந்த நிலையில் அடிவாரத்தில் கடை வைத்துள்ள அன்றாடம் காட்சிகளுக்கு மட்டும் தான் இது போன்ற கெடுபிடிகள் அதிகாரிகள் தரப்பில் காட்டப்படுமா? என்ற புகார் எழுந்திருக்கிறது. காரணம் பழனி முருகன் கோவில் சன்னதிக்கு அருகே போகர் சன்னதி இருக்கிறது. பழனி முருகனை தரிசித்த பிறகு சில பக்தர்கள் போகரை தரிசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் அதற்கு அருகிலேயே கோவில் நிர்வாகம் சார்பில் முருகன் படங்கள் முருகன் படம் பொறித்த காசுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அந்த கடைகளை சுற்றி கூட்டமாக இருப்பதால் முருகனை தரிசித்து விட்டு போகரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அவதி அடைகின்றனர். அடிவாரத்தில் கடை போட்டால் பக்தர்கள் சிரமத்தை சந்திக்கிறார்கள் எனக் கூறும் அதிகாரிகள் சன்னதியில் மட்டும் முருகன் படத்தை விற்று காசு பார்ப்பதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாதா? என கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தைப்பூச ஆய்வுக்காக பழநி வந்திருந்தார். அப்போது இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் கடைகள் அகற்றப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் நேற்று வரை இந்த விற்பனையானது நடைபெற்று வந்தது ஒன் இந்தியா தமிழ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது. எனவே அன்றாடம் காட்சிகளுக்கு ஒரு நியாயம் அதிகாரிகளுக்கு ஒரு நியாயமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications