சாமியாரை வைத்து காசு பார்த்த கும்பல்.. பணம் பிரிக்கும் தகராறில் அரங்கேறிய கொடூர கொலை! பரபரத்த பழனி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப் பூசத்தன்றே கோவிலுக்கு அருகே பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாமியாரை பராமரிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறிய நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கொலையாளிக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் கடந்த 11ஆம் தேதி மாலை தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர்.
அப்போது கோவிலுக்கு அருகே தான் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் பழனி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது கிரிவலப் பாதைக்கு அருகே தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. பழனி அடிவாரம் இடும்பன் மலை அருகே ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் காந்தியை பார்க்க வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து விடுதி உரிமையாளர் அடிவாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த நபர் யார் எதற்காக கொலை செய்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆனந்த் என்பவருக்கும் காந்திக்கும் சாமியார் ஒருவரை பார்க்க வரும் பக்தர்கள் பணத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து தப்பி ஓடிய ஆனந்தை போலீசார் பல இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பால சமுத்திரம் பகுதியில் உள்ள வரட்டாறு என்ற இடத்தில் ஆனந்த் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் ஆனந்தை பிடிக்க முயன்றனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆனந்த் அருகில் இருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் ஆனந்தின் கால் முறிந்து காயம் பட்டது. ஆனந்தை பிடித்து பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸார் விசாரணையில் ஆனந்த் மற்றும் காந்தி இருவரும் பழனி இடும்பன் கோயில் அருகே சப்பானி சாமியார் என்ற நபரை பராமரித்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.
சாமியாருக்கு பக்தர்கள் தரும் பணத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் காந்தியை ஆனந்த் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆனந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமியாரை பராமரித்து பணம் சம்பாதிக்கும் போட்டியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications