திண்டுக்கல்லில் 3 மணிநேரம் வெளுத்த மழை- மருத்துவ கல்லூரி மருத்துவமனை சுற்று சுவர் இடிந்து விழுந்தது!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று இரவு 3 மணிநேரம் இடைவிடாமல் மழை வெளுத்தெடுத்தது. இந்த கனமழையால் திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது இரவு நேரம் என்பதால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.
திண்டுக்கல் மாநகராட்சி மையப் பகுதியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக திண்டுக்கல், நத்தம் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விபத்து மற்றும் மகப்பேறு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் வருவது வழக்கம். தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அதேபோல் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி அருகே பள்ளிகள், வணிக வளாகங்கள், பூச்சந்தை, கோவில் மற்றும் அதிக போக்குவரத்து இருக்கும்.

கனமழை
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திண்டுக்கல்லில் கனமழை கொட்டியது. இந்த கனமழை சுமார் 3 மணிநேரம் நீடித்தது. திண்டுக்கல் நகரின் பல இடங்களில் ஆறுகளைப் போல மழைநீர் வெள்ளம் கரைபுரண்டோடியது.

ஏரிபோல் தேங்கிய வெள்ளம்
திண்டுக்கல்- திருச்சி நெடுஞ்சாலையில் காட்டாஸ்பத்திரி மேம்பாலம் முடியும் இடத்தில் ஏரிபோல தண்ணீர் முழங்கால் அளவுக்கு நின்றது. இதனால் அப்பகுதியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளித்தபடியே நகர்ந்தன. இதேபோல் நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

மருத்துவமனை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது
இந்த கன மழையின் காரணமாக மருத்துவமனை தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் புதிதாக இந்த சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. அப்போதே இந்த சுற்றுச் சுவர், கட்டுமானப் பணிகள் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. தற்போது 3 மணிநேரம் மழையை கூட தாங்க முடியாமல் அந்த சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ரனர்.

நிரம்பிய ஆத்தூர் அணை
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆத்தூர் காமராஜர் அணை நீர்தேக்கம் நிரம்பி உள்ளது. ஆத்தூர் அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் சில பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக கொடைக்கானலின் தாண்டிக்குடி மலைபகுதிகளில் இருந்து வெளியேறும் நீர் ஆத்தூர் அணைக்கு வரும். அங்கிருந்து குடகனாற்றில் நீர் திறந்துவிடப்படும். தற்போது ஆத்தூர் அணை 3-வது முறையாக இந்த ஆண்டு நிரம்பி உள்ளது. இது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications