நீங்க கட்சியிலேயே இல்லையே! பிறகெப்படி கூட்டம் நடத்தலாம்? திண்டுக்கல் காங்கிரஸ் Ex நிர்வாகிக்கு செக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த அப்துல்கனி ராஜா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள எச்சரிக்கை வருமாறு;

''திண்டுக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு எஸ். அப்துல் கனி ராஜா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
தற்போது திரு அப்துல் கனி ராஜா அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 26.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அந்த கூட்டம் கூட்டுவதற்கு தார்மீக அடிப்படையில் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.
இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சி விதிமுறைகளுக்கு முரணாக கூட்டப்படுகின்ற கூட்டம். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக்கூடாது. அப்படி கூட்டத்தில் பங்கேற்றால் அது கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் இறுதி முடிவிற்கு பிறகே திரு அப்துல் கனி ராஜா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனவே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் திரு அப்துல் கனி ராஜா நடத்துகின்ற கூட்டத்தில் பங்கேற்கவோ, அவருடன் கட்சி சம்பந்தமாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவோ கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்துகிறது.'' இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications