கொளுத்தும் வெயிலில் மயங்கி விழுந்து பெண் பலி.. திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வெயிலில் மயங்கி விழுந்து பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக, உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடுவோர் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். வெயில் கொடுமை, உடல் நலக் கோளாறுகள் தொடங்கி உயிரிழப்பு வரை ஆபத்தை ஏற்படுத்துகிறது.

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்த ஜோஸ்பின் மேரி என்ற பெண் பலியாகியுள்ளார். வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஜோஸ்பின் மேரி உடலை, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடுமையான வெயிலில் பெண் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் சுமார் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தி உள்ளது. கரூர் பரமத்தியில் 105, சேலம், வேலூர், தருமபுரியில் 104, திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெயிலில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப் படுகிறது.












Click it and Unblock the Notifications