முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துபாயில் பிரம்மாண்ட வரவேற்பு! மாஸ் திட்டத்துடன் பரபரப்பான முன்னேற்பாடுகள்!
துபாய்: துபாய் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அங்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் அந்த சங்கத்தின் அமீரகத் தலைவரும், திமுக அயலக அணி நிர்வாகியுமான மீரான் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் துபாய் என்பதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியை பார்வையிடவும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையிலும் இம்மாதம் 26-ம் தேதி துபாய் புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 2 நாட்கள் தங்குகிறார்.
இவரது துபாய் வருகையை திருவிழா கோலம் போல் கொண்டாட முடிவெடுத்துள்ள திமுக அயலக அணியும், வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர் சங்கமும் அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துபாய் வரும் முதலமைச்சருக்கு பெரியளவில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளை கொண்டாடு வகையில் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். மேலும், தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றிபெற்றதால் அதையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல்வரை துபாயில் வரவேற்க கட்சியினர் மட்டுமல்லாமல் அங்கு பணியாற்றக் கூடிய தமிழர்களையும் பெருமளவில் திரட்டுவதற்கான பணிகளை திமுக அயலக அணி நிர்வாகி எஸ்.எஸ்.மீரானும் முக்கிய தொழிலதிபர்கள் சிலரும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications