துபாய் சாலைகளில் மேஜிக்.. இனி பாதுகாப்பிலும் கூட பிரச்சனையே இருக்காது.. அசத்துதே அமீரகம்
துபாய்: ஒரு காலத்தில் கச்சா எண்ணெய்யை மட்டுமே பிரதானமாக நம்பி இருந்த துபாய், இன்று புதுமை மற்றும் நவீனத்தின் உச்சமாக மாறியிருக்கிறது. இதற்கிடையே சாலைப் போக்குவரத்தில் துபாய் இப்போது புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. இது நாம் எப்படி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறோம் என்பதையே மொத்தமாக மாற்றி அமைக்கும்.
துபாய் இப்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக மாறி இருக்கிறது. உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பல அதிநவீனத் தொழில்நுட்பங்களில் துபாய் சாதனை படைத்து வருகிறது. அப்படியொரு புதுமையைத் தான் இப்போது துபாய் தனது சாலைகளில் கொண்டு வருகிறது. இது நாம் எப்படிப் பயணிக்கிறோம் என்பதையே மொத்தமாகப் புரட்டிப் போடப் போகிறது.

ஆளில்லாத டாக்சி
துபாயில் முதன்முதலாக ஓட்டுநர் இல்லாத டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அமீரகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். சீன நிறுவனமான பைதுவின் அப்பல்லோ கோ (Baidu's Apollo Go) என்ற நிறுவனத்திற்கு இந்த ஆளில்லா டாக்ஸிகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.. துபாய் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார்.
ஷேக் ஹம்தான், இந்த ஆளில்லா காரில் முதலில் பயணித்தார். அதுவும் டிராபிக் இருக்கும் வழக்கமான சாலைகளில் அவர் இந்த ஆளில்லா டாக்சியில் பயணித்தார். துபாயில் எதிர்காலத்தில் சாலைப் போக்குவரத்து எப்படி இருக்கப் போகிறது என்பதை இது காட்டுகிறது. இந்த ஆளில்லா டாக்ஸி சேவை சில வாரங்களில் முழுமையாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
எப்படி செயல்படும்
செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட சென்சார்களை இந்த கார் கொண்டுள்ளது. டிராபிக் சூழல்களை ஆராய்ந்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்கும் சென்சார்களை இது கொண்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் சுமுகமான பயணம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. RT6 என்பது ஆறாம் தலைமுறை ஆளில்லா டாக்ஸியாகும். டிராபிக் அதிகரித்தாலும் அதற்கேற்ப இது துல்லியமாக இயங்குமாம்.
துல்லியமான லிடார் (LiDAR), அதிநவீன கேமராக்கள், மல்டி-பேண்ட் ரேடார்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட சென்சார்கள் இந்த கார்களில் உள்ளன. இந்த சென்சார்கள் காரைச் சுற்றியுள்ள சூழலைத் துல்லியமாக உணர்ந்து, போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப விரைந்து செயல்பட்டு ரியல் டைம் முடிவுகளை எடுக்க உதவுகின்றன.
சீன நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த பைது அப்பல்லோ கோ டாக்சிகள் உலகளவில் இதுவரை 150 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளன. அத்துடன் ஒரு கோடிக்கும் அதிகமான ஆளில்லா டாக்சி பயணங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. தனது விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, பைது அப்பல்லோ கோ, துபாய் அறிவியல் பூங்காவில் 2,000 சதுர மீட்டர் பரப்பளவிலான தனது முதல் வெளிநாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்துள்ளது.
துபாய்
துபாய் என்பது இப்போது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வசிக்கும் ஒரு சர்வதேச நகரமாக மாறி வருகிறது. இதனால் இதுபோன்ற அதிநவீன வசதிகளைக் கொண்டு வருவதில் துபாய் அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இது துபாய் சாலைப் போக்குவரத்தை மொத்தமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications