ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டிய பேய் மழை.. வெள்ளக்காடான நகரங்கள்.. அச்சத்தில் மக்கள்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியது. மக்களை குளிர் வாட்டி வதைத்த நிலையில், திடீரென இன்று அதிகாலை முதல் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. முதலில் சாதாரணமாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் பேய் மழையாக பெய்தது. மழை வெள்ளத்தால் பல சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்த மழையால் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மருத்துவமனைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் நீடித்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் அவையும் வெள்ள நீரில் மிதக்கின்றன.
வீடுகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மழையின் தீவிரத்தை உணர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து பலரும் சிரமத்துடன் வீடு திரும்பினர். பல மருத்துவமனைகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மழை நீரால் மின் கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்பதால் சில மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.
துபாயில் விமான நிலையத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனிடையே, மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்களில் இருந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications