ஆப்கானிஸ்தானுடனான மோதல் உச்சம்.. பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டாக வருகிறதா சவுதி அரேபியா? பரபர பின்னணி
துபாய்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் உச்சம் பெற்றுள்ளது. எல்லையில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டன. இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு கடும் இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவுதி அரேபியா களத்தில் குதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 2,600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் நிர்வாகம் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இந்தியா இதற்கு ஆதரவு கொடுப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல்
இத்தகைய சூழலுக்கு இடையே, நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையோர பகுதியில் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஆப்கான் தாலிபான் படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. 58 பேர் வரை பாகிஸ்தான் தரப்பில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா
பாகிஸ்தான் படைகளும் இதற்கு பதிலடியாக வான்வழி தாக்குதலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை தாலிபான் கடுமையாக கண்டித்துள்ளதுடன், எல்லையைத் தாண்டி மோதல்கள் தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவுதி அரேபியா களத்தில் இறங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரு நாட்டு கூட்டு ஒப்பந்தம்
அதாவது, சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2025 செப்டம்பரில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தமே இதற்கு காரணமாகும். பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் கூட்டுப் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கின்றன. ஒரு நாட்டின் மீதான தாக்குதல், இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து பாகிஸ்தானைப் பாதுகாக்க சவுதி அரேபியா வெளிப்படையாக உறுதியளித்துள்ளது. அதாவது நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மீது எதாவது ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும் இணைந்து பதில் நடவடிக்கையில் ஈடுபடுவது போல, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா இணைந்து பதிலடி கொடுக்கும்.
சவுதி அரேபியா நிலைப்பாடு என்ன?
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சவுதி அரேபியா நேரடியாக ராணுவ ரீதியாக தலையிடுமா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய ஆதரவாக அமைகிறது. மோதல் தீவிரமடைந்தால் இஸ்லாமாபாத்திற்கு சவுதி ஆதரவளிக்கும் சூழல் நிலவுகிறது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான மோதலில் சவுதி அரேபியா நிலைப்பாடு என்ன என்பது கேள்வியாக எழுந்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா, இரு தரப்பினரையும் நிதானத்துடன் செயல்படவும், பேச்சுவார்த்தையை முன்னுரிமைப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications