ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி! கடும் காய்ச்சலால் பாதிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் நேற்றைய தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பிய அவருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. இதையடுத்து உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், இன்றைய தினம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பிறந்தநாள் என்பது தான். மகன் இறந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என அறிவித்துவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க மட்டும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இன்னும் ஓராண்டு கூட நிறைவடையவில்லை. கடந்த மார்ச் மாதமும் இதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக இளங்கோவனுக்கு அடிக்கடி உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்றும் அவரை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது கடினம் எனவும் கடந்த மாதம் தான் ஒபனாக பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அதேபோல் கடந்தவாரம் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வழக்கம் போல் பரபரப்பாக பேசி பஞ்சாயத்தை கூட்டியிருந்தார்.
இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் விரைவில் குணம் அடைய வேண்டி அவரது ஆதரவாளர்கள் வேண்டி வருகின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மட்டுமல்ல இப்போது எங்கு பார்ப்பினும் காய்ச்சல், சளி, இருமல் என பொதுமக்களும் வானிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications