பஹ்ரைனில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா! பெற்றோர் வளர்ப்பு பற்றி பாடம் எடுத்த பர்வீன் சுல்தானா!
பஹ்ரைன்: பஹ்ரைனில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு பெற்றோர் வளர்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பஹ்ரைனில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றமானது தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;
குழந்தைகள் தினவிழா
குழந்தைகள் தினவிழாவானது அன்னை தமிழ் மன்றம் மூலம் பஹ்ரைனில் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த 7 வாரங்களாக குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி , பாட்டுப்போட்டி , திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நடன போட்டி, மறுவேடப்போட்டி , பேச்சுப்போட்டி என பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பெற்றோர் வளர்ப்பு
இந்த நிகழ்வில் சுமார் 300 மேற்பட்ட பஹ்ரைன் வாழ் தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனிடையே இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா "பெற்றோர் வளர்ப்பு" என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
கடல் கடந்து தொழில்
கடல் கடந்து தொழில் நிமித்தமாகவும், பணி நிமித்தமாகவும் வசித்து வந்தாலும் கூட தமிழர் பாரம்பரிய கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாடுகளில் தமிழ் சங்கங்கள் நிறைய உள்ளதால் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். அந்த வகையில் பஹ்ரைனில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றமானது பல ஆண்டுகளாக தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
முக்கியப் பிரமுகர்கள்
இந்த நிகழ்வில் பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சக முக்கிய பிரமுகர் காலித் அப்துல் ரஹ்மான், டாக்டர் மரியம் அலமாதி, சமா ஹுசைன் சோவேட்,ஈ.கே. கானு, கோபிநாத் மேனன், உள்ளிட்ட முன்னணி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முதன்மை விருந்தினர்களை அன்னை தமிழ் மன்றத்தின் துணை தலைவர் அப்துல் பாசித் மற்றும் பொதுச்செயலாளர் தாமரை கண்ணன் ஆகியோர் கவுரவித்தனர்.