திம்பம் மலைச்சாலையில் கோர விபத்து.. பிரேக் பிடிக்காமல் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்!
ஈரோடு: திம்பம் மலைப்பாதை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே இன்று வேன் ஒன்று கவிழ்ந்து 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். திடீரென வேன் பிரேக் பிடிக்காமல் தடுப்பு கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது.

இந்த மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் ஒன்று கவிழ்ந்து 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையத்தை சேர்ந்தவர்கள் கென்னேகால் சென்றுவிட்டு திரும்பும்போது, திம்பம் மலைப்பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேன் பிரேக் பிடிக்காமல் தடுப்பு கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications