வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்! என்னை யாரும் மதிப்பதேயில்லை! அதிமுக எம்.எல்.ஏ. குமுறல்!
ஈரோடு: வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், என்னை யாரும் மதிப்பதேயில்லை என அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் மேடை போட்டு குமுறியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பண்ணாரி. எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியான இவர், வருவாய் துறையினரை கண்டித்து சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதில் பேசிய பண்ணாரி எம்.எல்.ஏ., தன்னை ஒரு சட்டமன்ற உறுப்பினராகவே வருவாய்த் துறை அதிகாரிகள் நினைப்பதில்லை என்றும் தாம் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை எனவும் குமுறினார்.
இன்னும் சொல்லப்போனால் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், என்னை யாரும் மதிப்பதேயில்லை என மனவேதனையை பொதுவெளியிலேயே வெளிப்படுத்தினார். ஒரு எம்.எல்.ஏ.வான தனக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலையை பற்றி சொல்லவே தேவையில்லை என்றார்.
தாம் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் ஒருத்தரும் தன்னை மதிக்காமல் என்ன நினைப்பில் வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை என புலம்பினார்.

மணியக்காரர், விஏஓ, ஆர்.ஐ., தாசில்தார் என பல அதிகாரிகளும், அலுவலர்களும் இருந்தும் என்ன பயன் என கேட்ட அதிமுக எம்.எல்.ஏ. பண்ணாரி, யாராவது தங்களிடம் கொடுக்கப்படும் மனுக்களை விசாரிக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் முதியோர் உதவித் தொகை வழங்கும் விவகாரத்திலும் தாசில்தார்கள் ஆபிசிலேயே அமர்ந்துகொண்டு தனது பரிந்துரையை நிராகரிப்பதாக வேதனைத் தெரிவித்தார்.
இனிமேல் தனது மனுக்கள் மீது வட்டார வளர்ச்சி அலுவலர்களும், தாசில்தாரும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை அழைத்துச் சென்று அங்கேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications