கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் பிளாஸ்திரி.. திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதியாச்சு.. கொந்தளித்த ஈபிஎஸ்!
திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அட்டாக் செய்து பேசியுள்ளார் ஈபிஎஸ்.
ஈரோடு : "நான் முதல்வராக இருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தார்கள். இப்போது திமுக அரசு எட்டு வழிச் சாலையை கொண்டு வரும்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு மௌனம் சாதிக்கின்றன. திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் இன்று ஈரோட்டில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சூடாக பதிலளித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளையும் விளாசினார் ஈபிஎஸ்.

ஆளுக்கு ஒரு பகுதி
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிமுகவை சீண்டியிருந்தார். அதிமுகவில் இப்போது ஈபிஎஸ் பெரிய ஆளா? ஓபிஎஸ் பெரிய ஆளா? யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற போட்டிதான் நடக்கிறது, கைலாசா என்ற நாடு இருக்கிறதே அதுபோல ஏதாவது ஒரு நாட்டுக்கு போனார்கள் என்றால் ஆளுக்கு ஒரு பகுதியை பிரித்து இது ஓபிஎஸ் பகுதி; இது ஈபிஎஸ் பகுதி; இது டிடிவி பகுதி என பிரித்துக் கொண்டு ஆட்சி செய்ய முயற்சி பண்ணலாம் என விமர்சித்தார்.

செ.பாலாஜி என்ன ஜோசியரா
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரஸ் மீட்டில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "செந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறக்கூடியவர். ஏற்கனவே ஐந்து கட்சிகளுக்கு போய்விட்டு வந்தவர். அடுத்த தேர்தல் வரும்போது எந்தக் கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. மக்கள் தான் தேர்தலில் வாக்களிக்கிறார்கள், செந்தில் பாலாஜி ஒன்றும் ஜோசியம் சொல்ல முடியாது." எனத் தெரிவித்தார்.

பாஜக திமுக கூட்டணி
மேலும் பேசிய ஈபிஎஸ், " திமுக ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். 21 மாத திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தது. அப்போது ஐந்து வருடங்கள் என்ன அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டிருந்தார்களா? முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டு கோமா ஸ்டேஜுக்கு போய் விட்டார். அப்போதுகூட அமைச்சரவையை விட்டு விலகவில்லை. அப்படிப்பட்ட, திமுகவினருக்கு எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது.

கூட்டணி கட்சிகள்
அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கின்ற கட்சிகள் சொத்துவரி ஏறிப் போய்விட்டது ஏதாவது கோரிக்கை வைத்துள்ளார்களா? அதுவும் மக்களுடைய பிரச்சனை தானே? மக்களுக்கு ஏதாவது குரல் கொடுத்தார்களா? விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்களா? எங்கே பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம். போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத இடமே இல்லை. அதை எப்போதாவது கண்டித்திருக்கிறார்களா? மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களா?

வாயில் பிளாஸ்திரி
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் கிடைக்கவில்லை. அதற்காக போராட்டம் செய்திருக்கிறார்களா? கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எட்டு வழி சாலையை நான் முதல்வராக இருக்கும்போது எதிர்த்தார்கள். இப்போது திமுக அரசு அந்த எட்டு வழிச் சாலையை கொண்டு வருகிறது. அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு மௌனம் சாதிக்கின்றன. திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள்" எனக் கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications