எப்போதும் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.. செங்கோட்டையன் பேச்சு.. உற்று கவனித்த அதிமுகவினர்
ஈரோடு: செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையே அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே தனது இலக்கு என்றும் தொண்டனாக இருந்து பணியாற்றுவதே எப்போதும் விருப்பம் என்றும் கூறியிருக்கிறார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது எடப்பாடி பழனிசாமி கூட்டும் கூட்டங்களை செங்கோட்டையன் புறக்கணித்தே வந்தார்.

செங்கோட்டையன்
இதனால் மீண்டும் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடிக்குமோ எனக் கேள்விகள் எழுந்தது. இன்னும் ஓராண்டில் தேர்தல் நடக்கும் நிலையில், செங்கோட்டையன் எதாவது கலகம் செய்தால் அது அதிமுகவுக்குப் பெரிய அடியாகவே இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், நேற்று வியாழக்கிழமை அதிமுக கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் தனக்கு எப்போதும் தொண்டராக இருக்கவே விருப்பம் எனக் கூறியுள்ளார். அது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
நேற்று மே 1ம் தேதி நாடு முழுக்க உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் உழைப்பாளர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.. அதிமுக சார்பிலும் பல இடங்களில் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. . அதன்படி ஈரோடு ஆசனூரில் அதிமுக சார்பில் நடந்த மே தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
தொண்டனாக இருப்பதே விருப்பம்
அப்போது பேசிய செங்கோட்டையன், "என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் சாதாரணத் தொண்டராக இருந்தே பணியாற்ற விரும்புகிறேன்.அதிமுக வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனக்கு நோக்கம். அதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நான் பணியாற்றுகிறேன். இந்த இயக்கம் மண்ணில் வளர வேண்டும். இந்த இயக்கத்தில் இருப்போர் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எனது விருப்பம். அப்போது தான் மக்களின் கண்ணீர் துடைக்கப்படும்.
திமுக கடந்த 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே புதிதாக வேலை வழங்கியுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் நான் அமைச்சராகப் பணியாற்றிய துறைகளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைகளை வழங்கியுள்ளேன். இப்படி அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கா கொண்டு வந்துள்ளது.
200+ தொகுதிகள்
அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைந்த உடனேயே தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நலன் காக்கப்படும். 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து நாம் தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் நிச்சயம் நாம் 200+ தொகுதிகளில் வெல்லப் போகிறோம்" என்றார்.
முடிவுக்கு வந்த மோதல்
சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டும் கூட்டத்தை செங்கோட்டையன் தவிர்த்தே வந்தார். பொது நிகழ்ச்சிகளும் பேசும்போது கூட எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடுவதைக் கூட தவிர்த்தே வந்தார். இருப்பினும், சட்டசபை கூட்டத்தொடர் முடியும் போது நிலைமை மாறியது. சட்டசபையிலேயே எடப்பாடி பழனிசாமியை வணங்கி உரையை ஆரம்பிப்பதாக செங்கோட்டையன் பேசியிருந்தார். அதேபோல கடந்த வாரம் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications