ஈரோட்டில் ஒரே நாளில் ரூ. 49 லட்சம் சம்பாத்தியம்.. கலர் ஜெராக்ஸில் மாறிய வாழ்க்கை.. சிக்கிய 2 பேர்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பூபேஷ் என்பவர் உள்பட ஐந்து பேரிடம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாங்கித்தருவதாக 49 லட்சம் ரூபாய் பறித்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்வது இங்கு அதிக அளவில் நடக்கிறது. சற்று கவனமாக இல்லாவிட்டால், மோசடிகள் அரங்கேறுகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படும் நடத்தர வர்க்க இளைஞர்களிடம் ஐந்து லட்சம் கொடுத்த வேலைக்கான ஆர்டர் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள். சில வேலைக்கு 10 லட்சம் வரை கூட வாங்குகிறார்கள். அப்படி ஏமாறுபவர்களுக்கு போலியாக வேலைக்கான ஆர்டரை தயாரித்து ஒரு கலர் ஜெராக்ஸை தருகிறார்கள். அதனை வாங்கி ஏமாறுவது அதிக அளவில் நடக்கிறது.

அப்படித்தான் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதாகும் பூபேஷ் என்பவருடைய புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து செந்தில்குமார் என்பவரை ஈரோடு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரூ.49 லட்சம் மோசடி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், " செந்தில்குமாரும், பிரபுவும் மோசடி செய்யும் நோக்கத்தில் பூபேசுடன் நெருங்கி பழகியிருக்கிறார்கள், அப்போது அவர்கள் 2 பேரும், கோவையில் தமிழ்நாடு அரசுத்தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் வேலை செய்து வருவதாக கூறியிருக்கிறார்கள். மேலும் கிராம நிர்வாக அதிகாரி, அலுவலக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிட நியமனங்கள் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய பூபேஷ் உள்பட 5 பேர் பல்வேறு தவணைகளாக ரூ.49 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
சூலூரில் கணினி மையம் வைத்துள்ள பிரபு, பணத்தை பெற்றதும் போலியாக பணி நியமன உத்தரவுகள் தயார் செய்து கொடுத்திருக்கிறாராம். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சென்று விசாரித்தபோது, அது போலி என தெரியவந்திருக்கிறது.. அதன்பிறகே போலீசில் புகார் செய்துள்ளனர். போலி அரசாணை தயாரிக்க பயன்படுத்திய போலி அரசு முத்திரைகளையும் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications