கொடநாடு எஸ்டேட் விவகாரம்.. பூச்சாண்டி காட்டாதீர்கள்.. அது வேலைக்கு ஆகாது.. எடப்பாடி பழனிசாமி பதிலடி
கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை வைத்து பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி
ஈரோடு: கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை கூறி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இறுதிக் கட்ட பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் சுயேச்சைகள் 73 பேர் போட்டியிடுகிறார்களல். இந்த தேர்தலுக்காக 1,430 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

52 இடங்கள்
52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த பிரச்சாரத்தில் இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் விசாரணை கமிஷன் அறிக்கை நிலையை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தார்கள்.

கொடநாடு
கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வெளியில் வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன், அத்தனை பேரையும் பிடித்து சிறையில் அடைப்போம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு ஜெயலலிதா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது, கொடநாடு வழக்கின் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது என்று பேசி இருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு வழக்கு குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் அக்ரஹாரத்தில் தனது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கொடநாடு விவகாரத்தை கூறி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது. கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்ததே திமுகதான்.

முதியோர்களுக்கு நிதியுதவி
முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை திமுக அரசு நிறுத்திவிட்டது. நீட் தேர்வை கொண்டு வந்தது அப்போதைய காங்கிரஸ்- திமுக அரசுதான். 22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 12 லட்சம் பேருக்கு புதிதாக பட்டா வழங்கப்பட்டது. அதிமுக அழுத்தம் கொடுத்த பின்னரே முதல்வர் பொங்கல் பரிசை வழங்கினார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications