4 கி.மீ. தூரம்.. தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற டாக்டர்! நெகிழ்ச்சி
ஈரோடு: ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் புதுமண தம்பதி மாட்டு வண்டியில் பயணம் செய்த சம்பவம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
என்னதான் வெளிநாட்டு கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு சென்றாலும் பாரம்பரியமாக நாம் பயணம் செய்த மாட்டு வண்டி பயணத்தை யாராலும் மறந்துவிட முடியாது.
கார், பஸ், பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் மாட்டு வண்டியில்தான் எத்தனை தூரமாக இருந்தாலும் பயணம் செய்தனர். 150 கிலோமீட்டர் தூரத்தை இன்று நாம் சர்வ சாதாரணமாக கடக்கிறோம். ஆனால் அந்த காலத்தில் இத்தனை கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே 4 அல்லது 5 நாட்கள் ஆகும்.

மாட்டு வண்டி
ஆனால் இந்த மாட்டு வண்டி பயணத்தில் இயற்கையை ரசித்தபடி இயற்கை காற்றை சுவாசித்தபடி நாம் பயணம் செய்வது உடல்நலத்திற்கும் மன நலத்திற்கும் நன்மை பயக்கும். இன்றும் பல்வேறு கிராமங்களில் மாட்டு வண்டிகளில் மக்கள் பயணம் செய்துதான் வருகிறார்கள். அது போல் நகரங்களில் சில பள்ளிகள், கல்லூரிகள், அபார்ட்மென்ட்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களில் பொங்கல் பண்டிகையின் போது மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

திருமண ஜோடி
இந்த நிலையில் ஈரோட்டில் திருமணமான ஜோடி புகுந்த வீட்டிற்கு மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். ஈரோடு திண்டல் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கே.சி.பழனிசாமி- டி.உமா மகேஸ்வரி. இந்த தம்பதியரின் மகன் டாக்டர் நிசாந்த் பாலாஜி. இவர் தற்போது தோல் மருத்துவத்தில் உயர்கல்வி படித்து வருகிறார். இவருக்கும், ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த சி.ரமேஷ்- ஆர்.வசந்தாமணி தம்பதியரின் மகள் சி.ஆர்.சித்துவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

உறவினர்கள்
பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், புடைச்சூழ நேற்று காலை ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மஹாலில் திருமணம் நடந்தது. தமிழ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து புதுப்பெண்ணும் புதுமாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தது. அப்போது புதுமண தம்பதிகள் வித்தியாசமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

மணமக்கள்
மணமக்கள் செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி மண்டப வாசலில் தயாராக இருந்தது. இரட்டை காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியில், மணமகன் நிசாந்த் ஏறி உட்கார்ந்தார். அவரைத் தொடர்ந்து வண்டியில் சி.ஆர்.ரித்துவும் ஏறினார். மாட்டு வண்டி இருக்கையில் உட்கார்ந்து கொண்டு இரு பேரும் ஆளுக்கொரு தாம்பு கயிற்றை பிடித்துக் கொண்டனர்.

4 கி.மீ. தூரம்
அலங்கரிக்கப்பட்ட சாட்டையுடன் மாடுகளை தட்டி தட்டி வண்டியை ஓட்டினர். மண்டபத்தில் இருந்து அவருடைய வீட்டுக்கு சுமார் 4 கி.மீ தூரம் மாட்டு வண்டியிலேயே பயணம் செய்தனர். இவர்கள் உற்சாகமாக வாகனத்தை ஓட்டியது பார்ப்போரை உற்சாகம் அடையச் செய்தது. இதுகுறித்து டாக்டர் நிசாந்த் பாலாஜி கூறியதாவது: நாங்கள் மாட்டு வண்டியில் வீட்டுக்கு வர வேண்டும் என்பது எங்கள் பெற்றோரின் ஆசை.

பெண் அழைப்பு
திருமணத்திற்கு முதல் நாள் பெண் அழைப்பின் போது நானே வீட்டிலிருந்து மண்டபத்திற்கு மாட்டு வண்டியில்தான் வந்தேன். இதையடுத்து தாலி கட்டியதும் என் மனைவியை மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன். பாரம்பரியத்தையும் நம்முன்னோர்களின் வழியையும் பின்பற்றி எனது புது வாழ்க்கையை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பயணம் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத நிகழ்வு என்றனர்.












Click it and Unblock the Notifications