80% பேர் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள்.. ‛காரணம்’ இதுதான்..அழுத்திய ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஆஹா
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று ஓட்டு போட்டார். இதையடுத்து தொகுதியில் 80 சதவீத மக்கள் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள். என உறுதியாக கூறிய அவர் அதற்கான காரணம் என்ன? என்பதையும் விளக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் தேர்தலில் தான் வெற்றி பெற போவதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

80 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள்
இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் வாக்கினை செலுத்தி இருக்கிறேன். ஈரோடு கிழக்கில் இருக்கும் மக்களின் பெரும்பாலானவர்கள் அதாவது 80 சதவீதம் பேர் கைச்சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்டாலின், ராகுல்
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தவும், அவரது 20 மாத ஆட்சியின் அடையாளமாக இந்த தேர்தல் வெற்றி அமையும். அதேபோல் ராகுல் காந்தியின் தியாக நடைப்பயணத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு இருக்கும். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், வெள்ளோட்டமாகவும் இந்த தேர்தல் முடிவு இருக்கும்.

மிகப்பெரிய வெற்றி
எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு முன்பே மதசார்பற்ற கூட்டணி வேட்பாளரான எனது வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டனர். மிகப்பெரிய வெற்றியாக இது இருக்கும். ஓட்டு வித்தியாசத்தை என்னால் குறிப்பிட முடியாது. இருப்பினும் எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்.

செயல்படும் தேர்தல் ஆணையம்
தொகுதியில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பேதமின்றி தேர்தல் அதிகாரிகள் சில அலுவலகங்களை மூடினர். தொடர்ந்து தேர்தல் அமைதியாக நல்ல விதமாக நடக்கிறது'' என்றார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்படி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications