நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு.. ஈரோடு போலீசார் அதிரடி! என்ன காரணம்?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் மேனகாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மறைந்த எம்எல்ஏவான திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்க உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

சீமான் பிரசாரம்
திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன், பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் உள்ளிட்டர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார்.

சர்ச்சை கிளப்பிய பேச்சு
இந்நிலையில் சீமான் கடந்த 13ம் தேதி சீமான் ஈரோடு திருநகர் காலனி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பட்டியலினத்தில் உள்ள அருந்ததியர் மக்கள் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தை சேர்ந்த அருந்ததியர் மக்கள் துப்புறவு தொழிலுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என சீமான் கூறியிருந்தார்.

தேர்தல் அலுவலரிடம் புகார்
சீமானின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அருந்ததியர் மக்களும், அமைப்புகளும் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பல இடங்களில் சீமானின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. அதோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரிடம் அருந்ததியர் மக்கள் திருப்பி அனுப்பினர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இருப்பினும் கூட நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது பேச்சில் உறுதியாக உள்ளார். வரலாற்றை தான் பேசி உள்ளதாக அவரது தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

போலீசில் வழக்குப்பதிவு
மேலும் ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில் சீமானை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் குறித்து 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications