அதிர போகுது கொங்கு.. செங்கோட்டையன் ஸ்கெட்ச்.. நாளை விஜய் கட்சியில் ஐக்கியமாகும் முக்கிய புள்ளிகள்?
ஈரோடு: நாளைய தினம் ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தவெகவில் செங்கோட்டையன் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொங்கு மண்டலத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் சில பிரமுகர்களும் இந்தக் கூட்டத்தில் தவெகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு சில காலம் பிரச்சாரம் செய்யாமல் இருந்த விஜய் இப்போது தான் மீண்டும் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். சமீபத்தில் புதுச்சேரியில் அவரது பொதுக்கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அந்தக் கூட்டம் நடந்தது. எந்தவொரு பெரிய சிக்கலும் இல்லாமல் அந்தக் கூட்டம் நடந்து முடிந்தது.

ஈரோடு பிரச்சாரம்
இதற்கிடையே விஜய் தனது அடுத்த பிரச்சாரக் கூட்டத்தை ஈரோட்டில் நடத்துகிறார். நாளைய தினம் வியாழக்கிழமை ஈரோடு பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் இந்தப் பிரச்சாரம் நடைபெறுகிறது. கொங்கு பிராந்தியத்தில் எப்போதும் அதிமுகவே வலிமையானதாக இருந்துள்ளது. அந்தக் கொங்குப் பகுதியைத் தன்வசம் கொண்டு வரும் வகையில் விஜய் இந்த பிரச்சாரத்தை நடத்துகிறார்.
செங்கோட்டையன்
மேலும், செங்கோட்டையன் தவெகவில் ஐக்கியமான பிறகு தமிழகத்தில் நடக்கும் முதல் மக்கள் சந்திப்புக் கூட்டம் இதுவாகும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கான வேலைகளை செங்கோட்டையனே செய்து வருகிறார். அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரத் திட்டத்தை கூட செங்கோட்டையன் தான் வடிவமைத்திருந்தார். எனவே, விஜய்யின் இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது.
நாளை பிரச்சார கூட்டம் நடைபெறும் நிலையில், இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை செங்கோட்டையனுடன் இணைந்து புஸ்ஸி ஆனந்த் இன்று ஆய்வு செய்தார். தொண்டர்கள் சிரமமின்றி வந்து செல்லத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய பிரமுகர்கள்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு விஜய் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வருகிறார். புதுச்சேரியைப் போலவே பிரச்சார வாகனத்தின் மீது இருந்தபடியே பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்களைக் கட்டுப்படுத்தவும் முள் வேலிகள் அமைக்கப்படுவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்தப் பொதுக்கூட்டம் செங்கோட்டையனுக்கும் முக்கியமானது. தவெகவில் அவர் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் அதைப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். மிகப் பெரியளவில் கூட்டம் திரளும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டே தேவையான நடவடிக்கைகளை செங்கோட்டையன் எடுத்து வருகிறார். மேலும், இந்தக் கூட்டத்தில் மாஜி அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் சிலர் தவெகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.
அதிர போகுது கொங்கு
இதற்காக செங்கோட்டையன் சில மூத்த தலைவர்களிடம் பேசி இருக்கிறாராம். யாரெல்லாம் தவெகவில் இணைவார்கள் என்பதை மிகவும் சீக்ரெட்டாகவே செங்கோட்டையன் வைத்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்றைய தினம் கூட இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் அவர் பொறுத்திருந்து பாருங்கள் என்று பொதுவாகவே பதிலளித்தார். இருப்பினும், நாளை கொங்கு மண்டலத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் கூட்டத்தை நடத்துவதோடு சில முக்கிய பிரமுகர்களையும் இழுப்பதையே திட்டமாக வைத்திருக்கிறார் செங்கோட்டையன்!












Click it and Unblock the Notifications