ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு மகிழ்ச்சி.. ஈரோடு, திண்டுக்கல், நாகையில் வீடு தேடி வருகிறது பொருட்கள்
ஈரோடு: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்து வந்தன. இதனைக் கருத்தில்கொண்டு, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. நீண்டகாலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளில் அட்டைதாரரகளுக்கு மாதாமாதம் அத்தியவசிய உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.. இதற்காகவே 10,500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது..

மேலும், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்து உறுதி செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் முறைகேடுகள் தடுக்கப்படுகின்றன.
ரேஷன் கடைகள்
எனினும், மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகிறார்கள்.. எனவே இவர்களுக்கு மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை ரேஷனுக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி கொள்ளும் அனுமதியை அரசு ஏற்கனவே தந்திருக்கிறது.
இதற்கு, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில், அங்கீகார சான்றிதழ் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து தந்தால் போதும். எனினும், சில அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆகவேதான் இதற்காகவே, "www.tnpds.gov.in" என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கும் வசதியை, உணவு துறை புதிதாக ஆரம்பித்துள்ளது.
இந்த வெப்சைட்டில் மூத்த குடிமக்கள், தங்களின் சார்பில் அனுப்பும் நபரின் பெயர், உறவு முறை உள்ளிட்ட விபரங்களுடன், ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.. இதனை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் தருவார்கள்.. நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆன்லைனிலேயே பதிவாகிவிடும்.. இதன்காரணமாக, உடனே ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு ஏற்படும்.
வீடு தேடி ரேஷன்
இந்நிலையில் மற்றொரு வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. அதாவது, மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை, அரசு தற்போது செயல்படுத்த உள்ளது.
சோதனை முயற்சியாக, சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில், 5 நாட்களுக்கு அதாவது, நேற்று 1ம் தேதி முதல் வரும், 5ம் தேதி வரை துவக்கப்படுகிறது.
அதன்படி, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று தலா, 10 ரேஷன் கடைகளுக்கு உட்பட, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் வேனில் எடுத்துச் சென்று வினியோகம் செய்யப்பட்டன. இன்று சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில், சோதனை ரீதியாக வினியோகம் செய்யப்பட உள்ளது... ஈரோடு மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது.
சேகரிக்கப்பட்ட விவரங்கள்
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரிகள் சொல்லும்போது, பெருந்துறை தாலுகாவில் குறிப்பிட்ட கடைகளில், 700 பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் 10 கடைகளின் கீழ் உள்ள, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சென்று பொருட்களை வழங்குகிறோம்..
ஒருவரின் வீட்டிற்கு ரேஷன் பொருட்களை எடுத்து செல்ல எவ்வளவு நேரமாகிறது; எவ்வளவு செலவாகிறது என்ற விபரம், செலவு, பயனாளிக்கு தேவையான பொருள், வாகன வசதி, எதிர் நோக்கும் பிரச்சனைகள் போன்றவை சோதனை முயற்சியின் போது சேகரிக்கப்படுகிறது.. சேகரித்த விவரங்களை அரசிடம் தெரிவிப்போம். இவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்யப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications