எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்து இருக்கிறாரா.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி
இன்னும் 5 மாதத்தில் மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இன்னும் 5 மாதத்தில் மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் எடப்பாடி பழனிசாமி இதுவரை யாருக்காவது உண்மையாக இருந்திருக்காறா?. என்று பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒவ்வொன்றாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பேன் என்று சொல்லியிருந்தார். அதன்படி பால்விலையை குறைத்துள்ளார். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து கொடுப்பேன் என்று சொன்னார். அதையும் செய்து முடித்துள்ளார். 225 கோடி பயணங்கள் பெண்கள் மேற்கொண்டுள்ளனர். ஈரோட்டில் மட்டும் 11 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். கொரோனா கால 13 நிவாரண பொருட்கள், மக்களை தேடி மருத்துவம், விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு படிக்கக்கூடிய காலை சிற்றுண்டி, ஒன்றரை லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். இப்படி ஒவ்வொன்றாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..

5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை
அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றது. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் உத்தரவை முதல்வர் அறிவிப்பார். நான் உறுதி மொழி கொடுக்கிறேன்.. கண்டிப்பாக முதல்வர் உத்தரவு பிறப்பிப்பார்.. எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்து இருக்கிறாரா.. அண்ணாவினுடைய பெயரை கட்சியில் வைத்து இருக்கிறார்கள். அண்ணாவின் உருவத்தை கொடியில் வைத்து இருக்கிறார்கள்.

ஆளுநருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று அண்ணா சொல்லியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த ஆளுநருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறார். 19 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. என்றைக்காவது ஒருநாள் ஆளுநரிடம் போய் மசோதாக்கள் நிலுவையில் இருப்பது பற்றி பேசி டெல்லிக்கு அனுப்புங்கள் என்று சொல்லியிருப்பாரா.. ஆளுநரை போய் சந்திப்பது. மோடியை சந்திப்பது எல்லாம் என்ன பிரச்சினைக்கு.. அவருடைய கட்சி பஞ்சாயத்துக்கு மட்டும் தான் போவார்.

கமலாலயம் வாசலில் ஓபிஎஸ் இபிஎஸ்
இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட யார் வேட்பாளர், என்ன சின்னம் என்ற எல்லா பஞ்சாயத்தும் டெல்லியிலும் கமலாலயத்திலும் தான் நடைபெற்றது. எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் போய் விடாதீர்கள் என்று சட்டமன்றத்தில் சொன்னேன். எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவே இல்லை. ஓ பன்னீர் செல்வம் எழுந்து எங்களது கார் எந்த காலத்திலும் கமலாலயம் போகாது என்று சொன்னார். சொன்ன நேரம் இரண்டு பேரும் கமலாலயம் வாசலில் அப்பாயிண்ட்மண்டிற்காக காத்துக் கிடக்கின்றனர்.

பாஜக ஒரு கவர்னர் டிரெயின்ங் சென்டர்
பாஜக ஒரு கட்சியே இல்லை. ஆடியோ வீடியோவை வைத்து ஓட்டிக்கிட்டு இருக்கின்ற கட்சி.. அவங்க எதாவது பேசினால் உங்க ஆடியோவை வெளியிடுவேன் என்றும் இவங்களும்.. இவங்க எதாவது பேசுனா உங்க வீடியோ நாங்க வெளியிடுவோம் என்றும் பேசுராங்க.. அது ஒரு கவர்னர் டிரெயின்ங் சென்டர். கோச்சிங் சென்டர். தமிழக மக்கள் எப்போதுமே பாஜகவுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.. தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்.. மதத்தை வைத்து அரசியல் செய்தீர்கள் என்றால், தமிழக மக்கள் உங்களை என்றுமே நிராகரிப்பார்கள்..

ஓபிஎஸ் கவர்னர் ஆகிவிடுவார்
பாஜக ஒரு கவர்னர் டிரெய்னிங் செண்டர்.. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, நேற்று இல கணேசன் அவர்கள் கவர்னர் ஆகிவிட்டார். 2 நாட்களுக்கு முன்பு சிபி ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆகிவிட்டார். அதேபோல நம்ம தமிழிசை அக்கா அவங்களும் கவர்னர் ஆகிவிட்டாங்க.. என்ன பொருத்தவரைக்கும்.. நான் என்ன நினைக்கிறேன் என்றால்.. இன்னும் வெகு சில நாட்களிலே அண்ணன் திரு ஓ பன்னீர் செல்வம் கவர்னர் ஆகி விடுவார்.. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. இதேபோல அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாஜகவுக்கு தலைவர் ஆகிவிடுவார். எனவே இப்படி ஒரு கூட்டணி தமிழக பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பார்களா?.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications