ஆஹா.. தடாலடி பாஜக.. ‘ஷாக்’ ஆன எடப்பாடி டீம்.. கூட்டணி தொடருமா? பட்டும் படாமல் பேசிய செங்கோட்டையன்!
அண்ணாமலை பேச்சால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக ஒற்றுமையின்மையே தோல்விக்குக் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், கூட்டணி பற்றி பட்டும் படாமல் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், அதிமுகவை காக்க இணைந்து செயல்பட முன்வரவேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவும் அதையே வலியுறுத்தி வருவதால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தெர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் போட்டியிடப்போவதாக அறிவித்தனர். ஈபிஎஸ் கவுண்டர் சமூகத்தில் வேட்பாளரை நிறுத்தினால், ஓபிஎஸ் முதலியார் சமூகத்தில் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டார். அப்படி இருவரும் நின்றால், ஓட்டிகள் பிரிந்துவிடும் என்பதால், பாஜக இருவரும் இணைந்து வேட்பாளரை நிறுத்துமாறு கூறியது. ஆனால், ஈபிஎஸ் அதனை ஏற்காத நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால், பொதுக்குழு மூலம் ஈபிஎஸ் அணியின் தென்னரசுவே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் போட்டியில் இருந்து விலகுவதாகவும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என்றும் அறிவித்தார்.

அண்ணாமலை போட்ட போடு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். ஈபிஎஸ்ஸின் ஆணவப் போக்கால் அதிமுக தோல்வியடைந்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை, இரு அணியும் இணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சொன்னோம். வேட்பாளரை நிறுத்துவதிலும், சின்னம் கிடைப்பதிலும் பல சிக்கல்கள் இருந்தன. ஒற்றுமை இல்லாததால் அதிமுக தோல்வியடைந்துள்ளது என விமர்சித்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா?
அதிமுக தோல்விக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற வகையில் கருத்து தெரிவித்திருப்பது ஈபிஎஸ் அணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால், அடுத்தகட்டமாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வரும் நிலையில், பாஜக மீண்டும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பை வலியுறுத்தியுள்ளது எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாஜக - அதிமுக ஈபிஎஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணையாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், தமிழ்நாட்டில் வாக்கு இல்லாதவர்கள் கேள்விக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. புகழேந்தி தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமையே இல்லாதவர், அவர் கேள்விக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.

இதுவே வெற்றி தான்
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி பற்றிப் பேசிய செங்கோட்டையன், ஈரோடு தேர்தலில் நிற்கும்போது இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற குழப்பம் இருந்தது. நீதிமன்ற உத்தரவால் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதுவே எங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எவ்வளவோ இடர்பாடுகளுக்கு மத்தியில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அப்போ பாஜக?
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் நெருக்கத்தில் தீர்மானிக்க வேண்டிய ஒரு முடிவு. அதே நேரத்தில் அதிமுகவை பொறுத்தவரை கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக உள்ளது எனத் தெரிவித்தார்.

கூட்டணி - குழப்பம்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வமோ, இணைந்து செயல்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறார். இப்படியான சூழலில் பாஜகவும் அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தினால், பாஜக உடனான கூட்டணியையும் ஈபிஎஸ் உதறத் தயங்கமாட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கோட்டையன், பாஜக கூட்டணி பற்றி உறுதியற்ற வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications