மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் ஸ்டாலின் மேஜர் அறிவிப்பு! டிச. 15 முதல் விடுபட்டவர்களுக்கும் ரூ.1000
ஈரோடு: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஈரோட்டில் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு என்று கூறினார்.

தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைப்படுகிறேன் என்றும் தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை என்று கூறினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மேலும் தந்தை பெரியார் இல்லையென்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும் என்றும் உறுதியளித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு 4. 5 கோடியில் அலுவலக கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும் கோபி, புஞ்சை, புளியம்பட்டி நகராட்சிகளுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் கட்டி தரப்படும் எனவும் தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும் என்றும் கூறினார். தோனி மடுவு பகுதியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற தகவலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இதனால், உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications