“ஏன் உள்ள போறீங்க?” செங்கோட்டையன் வீட்டில் அதிமுக தொண்டர்களை விசாரித்து அனுமதிக்கும் போலீசார்!
ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையனை சந்திக்க வருவோரிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னரே உள்ளே அனுமதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிகான பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதிருப்தி தெரிவித்தது, அதிமுக மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தில் குவிந்ததால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், வழக்கமாகவே பலர் தன்னைச் சந்திக்க வருவார்கள் என்றும் அந்தியூரில் இருந்து பலர் அழைப்பிதழ் வழங்க வந்திருந்தனர் என்றும் விளக்கம் அளித்திருந்தார் செங்கோட்டையன்.
நேற்று மாலை கோபி அருகே லக்கம்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. வழக்கமாக கட்சி பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பெரிதாகவும், அதற்கடுத்து உள்ளூர் தலைவர்களின் படங்கள் சிறிதாகவும் போடப்படும். ஆனால், நேற்று லக்கம்பட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களும் நடுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையனின் படமும் இருக்குமாறு டிசைன் செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "எம்.ஜி.ஆர் படமும் ஜெயலலிதா படமும் இல்லை என்பதால்தான் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள்" என்று பேசினார்.
இந்நிலையில், செங்கோட்டையன் வீட்டில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இன்று, செங்கோட்டையனைச் சந்திக்க வரும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, விசாரித்துவிட்டே உள்ளே அனுமதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"எனது வீட்டிற்கு நான் போலீஸ் பாதுகாப்பை கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். காவல்துறையினர் பாதுகாப்பு என்ற பெயரில் என்னை கண்காணிக்கின்றனர்." என நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications