பாஜகவிடம் பேசி 100 நாள் வேலை சம்பளத்தை வாங்கி கொடுக்கச் சொன்ன பெண்கள்.. செங்கோட்டையன் மழுப்பல் பதில்
ஈரோடு: 100 நாள் வேலை திட்ட ஊதியம் வழங்கப்படாதது குறித்து கூட்டணி கட்சியான பாஜகவிடம் பேசுவீர்களா என பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
ஈரோட்டில் இன்று அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடி பேச்சைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் மற்றும் இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ குறியீடுகள் பற்றி தவறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.
பொன்முடி பேச்சுக்கு கண்டனம்
அப்போது பேசிய அவர், "அமைச்சர் பொன்முடியின் பேச்சு மக்களின் மனங்களை, குறிப்பாக பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் நெஞ்சங்களில் கூர்வாளாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பொன்முடி அமைச்சராக இருக்க தகுதியற்றவர்.
ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டும்? அதை விடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்திய ஒருமைப்பாடு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் இப்படி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.
அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. இது போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
அதிமுக தான் இனி
அமைச்சராக இருந்துகொண்டே பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்வதை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டம் ஓசி என்று சொல்கிறார், அப்படி கொச்சைப்படுத்தி பேச அவருக்கு தகுதி இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் தி.மு.க அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அ.தி.மு.க 2026ம் ஆண்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்.
வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்போடு இருந்து வருகிறோம். இதோடு அமைச்சர் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். 2026 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைப்போம். அதற்கு தொண்டானாக இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்." என்றார்.
என்ன செய்கிறது திமுக அரசு?
அதைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு அமைச்சர் தான் பொறுப்பேற்கும் போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கிறார். அப்படி உறுதிமொழி மீறி ஒரு அமைச்சர் இது போன்ற வார்த்தைகளை பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அமைச்சர் இப்படி பேசி இருக்க கூடிய நிலையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்று
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர் பேச்சு மற்றவர்கள் புண்படும் அளவிற்கு குறிப்பாக பெண்கள் மனம் புண்படும் அளவிற்கு உள்ளது. அவரின் இந்த செயல்கள் தொடர்ந்து வருகிறது. ஆகையால் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்குப் பிறகு என்ன முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை எதிர்க்கட்சித் தலைவர் முடிவு செய்வார்" என்றார்.
100 நாள் வேலை ஊதியம் - மழுப்பல் பதில்
ஆர்ப்பாட்டத்தின்போது 100 நாள் திட்டத்தில் ஊதியம் வரவில்லை என பெண்கள் செங்கோட்டையனிடம் புகார் அளித்தனர். அதுகுறித்து கூட்டணியில் உள்ள பாஜகவிடம் பேசுவீர்களா என்ற பெண்களின் கேள்விக்கு செங்கோட்டையன், "அதிமுக ஆட்சி காலத்தில் இது போன்ற நிலை ஏற்படும் போது அப்போது மூன்று மாதத்திற்கான தொகையை அரசே வழங்கியது. அதற்குப் பிறகு மத்திய அரசு வழங்கிய நிதியை அரசு நிதியில் சேர்க்கப்பட்டது" என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications