இதுமாதிரி பேசி.. காணாமல் போனவர்கள் பட்டியலில் கடைசியில் இருக்கிறார் சீமான்.. கே.எஸ்.அழகிரி விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் சீமான் பற்றி கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
ஈரோடு: தமிழ்நாட்டில் எதிர்மறையாக பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாகவும், அப்படி காணாமல் போனவர்களின் பட்டியலில் சீமான் கடைசியில் இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மறுபக்கம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதனிடையே இரட்டை இலை சின்ன வழக்கு உள்ளிட்ட நீதிமன்ற விவகாரங்களை முடித்து, அதிமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி. உங்களுக்கு திராணி இல்லை. தெம்பு இல்லை. அதிமுகவை சந்திக்கும் திறமை இல்லை. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி. அதிமுகவை எதிர்க்கும் சக்தி உனக்கு கிடையாது என்று பேசியது விமர்சனத்தை சந்தித்துள்ளது.

கே.எஸ்.அழகிரி பிரச்சாரம்
இதற்கு திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் மேற்கொண்டார். 21 மாத கால ஆட்சியில் திமுக செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி
இதனைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்த போது, எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கே.எஸ்.அழகிரி கூறுகையில், எடப்பாடி பழனிசாமி பேசியது தவறு. நாம் அனைவரும் இவற்றையெல்லாம் கடந்து அரசியல் செய்கிறோம். எந்த கொள்கைகளை பேசினாலும், ஒருவரை ஒருவர் மதிக்கும் அரசியலை பின்பற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

சீமானுக்கு பதிலடி
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பற்றிய சீமான் விமர்சனம் பற்றிய கேள்விக்கு, சீமான் குறைசொல்ல வேண்டும் என்று சொல்பவர். சீமான் ஆக்கப்பூர்வமான மனிதரல்ல. அரசியல் என்பது ஆக்கப்பூர்வமான மனிதர்களுக்கு மட்டுமே இடமளிக்கும். எதிர்மறையாக பேசியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டார்கள். அப்படி காணாமல் போனவர்களின் பட்டியலில் சீமான் கடைசியில் இருக்கிறார். நடைமுறை சாத்தியங்களையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பேசலாம்.

பெரியார் தமிழர் இல்லையா?
தமிழ்நாட்டிற்காக பாடுபட்டவர்கள், போராடியவர்களையெல்லாம் தமிழர்கள் இல்லை என்று கூறுகிறார். தந்தை பெரியாரை தமிழர் இல்லை என்று கூறுகிறார். அது முறையல்ல. இதுபோல் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஒரு மேடையில் ஏறி அநாகரீகமாக பேசினால் பலரும் பார்ப்பார்கள். எப்போதும் தனது கருத்தில் அழுத்தமாகவும், கொள்ளைகளையும் பேச வேண்டும். தனிமனித விமர்சனங்கள், ஒருவரை அநாகரீகமாக பேசுவது முறையல்ல என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications