திருடச் சென்ற வீட்டுக்கே.. திரும்பி வந்து "மன்னிப்பு" கேட்ட திருடன்.. என்னா மாரி ஐடியா பண்றாங்க!
"உங்கள் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு திருட வந்தது நான்தான். அதை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்போது திருந்திவிட்டேன்"
ஈரோடு: திருடச் சென்ற வீட்டுக்கே திரும்பிச் சென்று வீட்டு உரிமையாளரிடம் ஒரு திருடன் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
ச்சே.. இரண்டு நாட்களில் இப்படியொரு மனமாற்றமா என நினைத்த போதுதான் இதன் பின்னணியில் உள்ள ட்விஸ்ட் தெரிந்திருக்கிறது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் வீட்டு உரிமையாளர் பெண், சாதூர்யமாக செயல்பட்டதற்கு போலீஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அறுந்து கிடந்த இண்டர்நெட் வயர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரண்யா. சிங்கப்பூரில் ரமேஷ் வேலை செய்து வருகிறார். சரண்யா தனது மாமியாருடன் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த 9-ம் தேதி, தனது வீட்டில் இண்டர்நெட் வயர் துண்டிக்கப்பட்டிருந்ததை சரண்யா பார்த்துள்ளார். லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது வயர் அறுந்திருக்கும் என நினைத்த சரண்யா, இண்டர்நெட் நிறுவன ஊழியர்களை வரவழைத்துத் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரிசெய்துள்ளார்.

எகிறி குதித்த திருடன்
இந்த சூழலில், அன்றைய தினம் இரவு, அவரது வீட்டு காம்பவுண்டுக்குள் யாரோ எகிறிக் குதிக்கும் சத்தம் சரண்யாவுக்கு கேட்டுள்ளது. பின்னர் சரண்யா வீட்டில் மின் விளக்குகளைப் போட்டுச் சத்தமிட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே, திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை சரண்யா ஆய்வு செய்த போது, வீட்டு காம்பவுண்டுக்குள் ஒருவர் ஏறிக் குதித்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாரிடமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் அனுப்பியுள்ளார் சரண்யா.

"திருந்திட்டேன்.. மாட்டிவிட்றாதீங்க.."
இந்நிலையில், நேற்று மதியம் அடையாளம் தெரியாத ஒரு நபர், சரண்யா வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். சரண்யா கதவைத் திறந்ததுதான் தாமதம்.. சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்துள்ளார் அவர். இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா, என்ன ஏது என்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த நபரோ, "உங்கள் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு திருட வந்தது நான் தான். அதை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்போது நான் திருந்திவிட்டேன். இனி நான் எங்கும் திருட மாட்டேன். போலீஸில் என்னைப் பிடித்துக்கொடுக்க வேண்டாம்" என மன்றாடியுள்ளார்.

போலீஸ் விசாரணை
அப்போது அங்கிருந்த சரண்யாவின் மாமியாரும், "பார்க்கப் பாவமாக இருக்கிறது. திருந்திவிட்டதாகவும் கூறுகிறான். விட்டுவிடலாம்" எனக் கூறியிருக்கிறார். திருடன் முன்பு சரண்யாவும் மாமியார் சொல்வதை ஆமோதிக்கும் விதமாகப் பேசியுள்ளார். பின்னர் தண்ணீர் எடுத்துத் தருகிறேன் எனக் கூறி உள்ளே சென்ற சரண்யா, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அதிரடியாக அங்கு வந்த போலீஸார், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.

மன்னிப்பு கேட்பது போல நடிப்பு
இதில், அவர் சூரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரிய வந்தது. சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர், இரவில் தனியாகப் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குச் சென்று திருடி வந்ததும் தெரியவந்தது. அப்படித்தான், சரண்யா வீட்டுக்கும் வந்திருக்கிறார். இதற்காக, முந்தைய நாள் இரவே அங்கு வந்து இண்டர்நெட் கேபிள் வயரை துண்டித்திருக்கிறார். இண்டர்நெட் வயரை துண்டித்துவிட்டால், சிசிடிவியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து, இப்படிச் செய்ததாக போலீஸாரிடம் கூறினார். ஆனால் சரண்யாவோ சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்து வருவதை அறிந்த அவர், அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்து இங்கு வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர். சமயோஜிதமாக செயல்பட்ட சரண்யாவுக்கு போலீஸார் பாராட்டும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications