தமிழ்நாடு பார்த்திராத தேர்தல் அறிக்கை.. தவெக பக்கா ஸ்கெட்ச்.. அப்டேட் கொடுத்த நாஞ்சில் சம்பத்
ஈரோடு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், இதுவரை தமிழ்நாடு பார்த்திராத ஒரு தேர்தல் அறிக்கையை தவெக வெளியிடப் போகிறது என்று கூறியுள்ளார்.
தவெக மூத்த தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கூட்டணி இல்லை என்று சொல்ல மாட்டேன். கூட்டணிக்கான காலம் கனிந்து வருகிறது. அதிகாரத்தில் உள்ள திமுகவை வீழ்த்துகின்ற போரில் எங்கள் தலைவர் வெற்றி பெறுவார். எங்களுக்கும் கூட்டணி அமையும். அதை இப்போது சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமியை போல ஈனத்தனமான அரசியலை தமிழ்நாட்டில் வேறு யாரும் செய்யவில்லை.

எடப்பாடி மீது விமர்சனம்
நாமக்கலில் அதிமுக தொண்டரின் கையில் தவெக கொடியை கொடுத்து, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று ஒருவர் பேசுகிறார் என்று சொல்கிறார். அவரை எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியவில்லை. 26 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு மோடியின் கால்களில் விழுந்தவர் எடப்பாடி பழனிசாமி. தவெக ஊழலற்ற நிர்வாகத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஊழல் வழக்குகள்
ஊழல் கரைபடிந்தவர்களுடன் கூட்டணி வைப்பது ஆரோக்கியமாக இருக்காது என்ற விமர்சனம் வந்த காரணத்தால், அதை எங்கள் தலைவர் விளக்கியுள்ளார். விஜயபாஸ்கர் குட்கா வழக்கு, வேலுமணி, தங்கமணி, கரூர் விஜயபாஸ்கர் என்று பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அதனால் எங்கள் தலைவர் விமர்சிக்கிறார். அதற்கு அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.
தவெக தேர்தல் அறிக்கை
அதை நாங்கள் கடந்து போகிறோம். எங்களுக்கு அதிமுக ஒரு பொருட்டே இல்லை. எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக, பாஜகவை விமர்சிக்க இது சரியான நேரம் இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய மு.க. ஸ்டாலின் இப்போதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது யுத்தகளம். இதில் நாங்கள் திமுகவை வீழ்த்துவோம். இதுவரை தமிழகம் பார்க்காத, கேட்காத ஒரு தேர்தல் அறிக்கையை தவெக வெளியிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications