சபாஷ்! தாய் மொழியில் மருத்துவம்.. எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இந்தியில் பாடங்கள்! மாணவர்கள் வரவேற்பு
போபால்: இந்தியாவிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமே இருந்து வருகிறது. தாய்மொழியில் இல்லாமல் வேற்று மொழியில் கற்பிப்பது என்பது கற்றல் சிக்கலை ஏற்படுத்தும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
இதனிடையே மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பில் புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியில்
அதாவது மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் பயோ கெமிஸ்டரி (anatomy, physiology, biochemistry) ஆகிய மூன்று பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை அக்டோபர் 16ஆம் தேதி இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் புத்தகங்களை வெளியிடு உள்ளார். மருத்துவம் சார்ந்த புத்தகம் இந்தியில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சிவராஜ் சிங் சவுகான்
இது குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்றுக் கற்பிக்க முடியாது என்ற எண்ணத்தை இது நிச்சயம் மாற்றும். இந்தி மொழியிலும் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை உணர்த்த இது உதவும். கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை. அதற்கான ஒரு முயற்சியாகவே இது இருக்கும்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

வல்லுநர் குழு
புத்தகங்களின் இந்தி மொழிபெயர்க்க போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் மருத்துவத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களும் இடம் பெற்று இருந்தார்கள். 97 மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் பல மணி நேர உழைப்பிற்குப் பின் புத்தகத்தை அவர்கள் வெற்றிகரமாக மொழி பெயர்த்து உள்ளனர்.

பாடங்கள்
இது தொடர்பாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில், "ஆங்கில புத்தகங்களுடன் இந்தி புத்தகங்களும் கிடைக்கும்.. அதேநேரம் சிக்கலான technical வார்த்தைகள் ஆங்கிலத்திலேயே இருக்கும். நாட்டிலேயே இந்தியில் மருத்துவக் கல்வியைத் தொடங்கும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் இருக்கும். இந்த பைலட் திட்டம் காந்தி மருத்துவக் கல்லூரியில் இருந்து தொடங்கும்.

பயன்படும்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்தியில் பாடப் புத்தங்கள் வெளியிடுகிறோம். அடுத்த ஆண்டில் இரண்டாம் ஆண்டு புத்தகங்களும் வெளியிடப்படும். இந்தி மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எதுவும் இருக்காது. வழக்கமான வகுப்புகளே இருக்கும். ஆங்கில புத்தகங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் உள்ள மாணவர்கள் இந்த இந்தி புத்தகத்தைப் பயன்படுத்தலாம்" என்றார்.

வரவேற்பு
இந்த புதிய திட்டத்தை அங்குப் படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரவேற்றுள்ளனர். ஆங்கில மொழியைப் புரிந்து கொள்ளக் கஷ்டப்படும் மாணவர்களுக்கு இது உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைச் சரியாக மொழிபெயர்ப்பு செய்தால் மட்டுமே அது பயன்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications