தடுக்கி விழுந்தா பெங்களூர் ஏர்போர்ட்! அப்ப ஓசூருக்கு விமான நிலையம் ஏன் தேவை தெரியுமா?
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ள நிலையில் அது ஏன் என்பதற்கான கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு அமைத்து தர முன்வராத நிலையில் இந்த விமான நிலையம் அமைந்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
கிருஷ்ணகிரியை அடுத்த ஓசூர் மாநகராட்சி பகுதியில் சிப்காட் மையங்கள் மற்றும் சில பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள், கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இதனால் நாட்டின் ஐடி ஹப் பெங்களூர் என அழைக்கப்பட்டால், தமிழகத்தின் இன்டஸ்டிரியல் ஹப் ஓசூர் என சொல்லலாம்.

ஓசூரிலிருந்து 75 கி.மீ. தூரத்தில் பெங்களூர் கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு சென்றுதான் ஓசூர் மக்கள் விமான சேவையை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஓசூரிலிருந்து விமான நிலையத்திற்கு செல்ல 3 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. இதனால் தொழில் வளர்ச்சியடையவும் மக்கள் பயன்பாட்டுக்காகவும் ஓசூரில் உள்ள விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
உதான் (UDAN) என்ற திட்டத்தின் வாயிலாகத்தான் மத்திய அரசு குறைந்த விலையில் மக்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. புதிய விமான நிலையங்களையும் அமைத்து வருகிறது. இந்த திட்டத்திலாவது ஓசூரில் விமான நிலையம் அமையும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இது குறித்து கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதைய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக இருந்த வி.கே. சிங் கூறுகையில் உதான் திட்டத்தின் முதல் ஏலத்திலேயே சென்னை- ஓசூர்- சென்னை விமான நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது.
ஆனால் ஓசூர், பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் இருக்கிறது. இந்த கெம்பேகவுடா விமான நிலையத்துடன் மத்திய அரசு செய்திருக்கும் ஒப்பந்தத்தில் 2033 க்குள் இந்த விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. எனவே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் மைசூர், ஹாசன் விமான நிலையங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பலரை கவலையடையச் செய்தது. உதான் திட்டத்தில் ஓசூரை இணைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அப்போது முதல்வர் இரு புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றுதான் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படுவது!
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் 2000 ஏக்கரில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் பயனுறும் வகையில் அமைக்கப்படும். அது போல் கோவை கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் திருச்சியில் கலைஞர் நூலகம் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் ஓசூரை சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications