லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் பிரபாஸை களமிறக்க பாஜக திட்டம்.. பரபர ஆபரேஷன் பாகு!
லோக்சபா தேர்தலுக்காக பாஜக சார்பில் ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலுக்காக பாஜக சார்பில் ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
டோலிவுட்டில் மட்டும் பிரபலமாக இருந்த நடிகர்தான் பிரபாஸ். தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே இவரை தெரிந்து இருந்தது. இந்த நிலையில் பாகுபலி படம் மூலம் இவர் உலக வைரலானார்.
பாகுபலி படத்தில் சில இடங்களில் இந்துத்துவா கருத்துக்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்த நிலையில்தான் பாகு பிரபாஸின் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.
தேர்தல்
லோக்சபா தேர்தலில் பாஜக எப்படியாவது ஆந்திராவில் அதிக இடங்களை பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறது. பாஜகவின் கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஏற்கனவே விலகிவிட்டது. அதே போல் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத காரணத்தால் அம்மாநில மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
பிரபாஸை பயன்படுத்த
இதனால் தற்போது பிரபாஸை தேர்தல் நேரத்தில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பிரபாஸை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தேர்தலில் நிற்க வைக்கவும் பாஜக திட்டமிடுகிறது. பாஜக வலுவில்லாமல் இருக்கும் பகுதியில் பிரபாஸை நிற்கவைத்து கல்லா கட்ட பாஜக யோசித்து வருவதாக கூறுகிறார்கள்.
வாய்ப்புள்ளது
ஏற்கனவே பிரபாஸின் சித்தப்பா தொடங்கி அவரின் நெருங்கிய உறவினர்கள் பலர் பாஜகவில் இருக்கிறார்கள். அதேபோல் பிரபாஸின் மாமா மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜுவிற்கு ஆந்திரா கவர்னர் பதவியை பாஜக அளிக்க உள்ளதாகவும் தகவல் வருகிறது. இதனால் பிரபாஸ் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
அட
அதே சமயம் பிரபாஸ் இப்போது அரசியலுக்கு வர கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரியுள்ளனர். அவர் இப்போதுதான் தனது சினிமா வாழ்வில் உச்சத்தில் உள்ளார். அதனால் அவர் இப்போது அரசியலுக்கு வர கூடாது. ஏற்கனவே பவன் கல்யாண் தொடங்கி பலர் அரசியலுக்கு வந்து சினிமாவைவிட்டு விலகிவிட்டதால் பிரபாஸும் அரசியலுக்கு வர அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.