200 கோடி நிலம் அபகரிப்பு.. முன்னாள் எம்பி வீட்டில் 300 சொத்து பத்திரங்கள்.. அதிர்ந்த அமலாக்கத்துறை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சத்யநாராயணா உள்பட சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் முன்னாள் எம்.பி. உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து 300 விற்பனை பத்திரங்கள் சிக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே எந்தனா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 12.51 ஏக்கர் நிலத்தை முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு கட்டுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மாநில அரசு கடந்த 2008-ம் ஆண்டு வழங்கி இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு இப்போது 200 கோடிக்கு மேல் போகிறது.

இந்நிலையில் இந்த குறிப்பிட்ட அரசு நிலத்தை, முதியோர் இல்லம் கட்டுவதற்காக தனியார் நிறுவனத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆந்திர அரசு பதிவு செய்து கொடுத்தது. ஆனால் இந்த நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சத்யநாராயணா உள்ளிட்டோர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 19-ந் தேதி அதிரடி சோதனையும் நடத்தினார்கள். முன்னாள் எம்.பி.சத்யநாராயணா, ஆடிட்டர் கண்ணமனேனி வெங்கடேஸ்வரராவ் உள்பட 3 பேருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 300-க்கு மேற்பட்ட சொத்து விற்பனை பத்திரங்கள், பினாமி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடுகள் கட்டுவதற்காக அரசு வழங்கிய இந்த நிலத்தை குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி உள்பட முக்கிய பிரமுகர்கள் மோசடியாக தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர். பின்னர் அதை சிறிய மனைகளாகப் பிரித்து, 2021-ம் ஆண்டு முதல் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அதன் மூலம் ரூ.150 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளார்களாம்.
மேலும் முன்னாள் எம்.பி. சத்யநாராயணா உள்ளிடடோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்துள்ளதும், ரூ.50 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications