அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவருக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் தொடர்பு? வெளியான போட்டோ
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இல்லத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்பவர் ரேவந்த் ரெட்டியின் உதவியாளர் என்று கூறி பிஆர்எஸ் கட்சி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி உடன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புஷ்பா 2 படச் சிறப்புக் காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். முதலில் அவரது இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்திய அவர்கள், பிறகு கற்களையும் தக்காளியையும் வீட்டின் மீது வீசினர். இது மிகப் பெரியளவில் பேசுபொருளானது.
ரேவ்ந்த் ரெட்டியின் உதவியாளர்:
இதற்கிடையே அல்லு அர்ஜுன் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உதவியாளர் என்று பிஆர்எஸ் சில பகீர் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ரேவந்த் ரெட்டியோ, காங்கிரஸ் தலைவர்களோ இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2009ஆம் ஆண்டு மாபெரும் தெலுங்கனா என்ற கோஷத்தோடு உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழுவைத் தொடங்கினர். அதை வன்முறைக்கும் மிரட்டலுக்கும் பயன்படுத்துவது அருவருப்பானது. அல்லு அர்ஜுன் வீட்டைத் தாக்கிய ஸ்ரீனிவாஸ் ரெட்டி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் தலைவர் இல்லை.
அல்லு அர்ஜுன்:
அவர் ரேவந்த் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர். மேலும், 2019இல் நடந்த ஜில்லா தேர்தலில் கோடங்கல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் தான் இந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி" என்று சில பரபர குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். மேலும், இது தொடர்பாக சில போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். ரேவந்த் ரெட்டி உடன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இருக்கும் படங்களும் அதில் இடம்பெற்றுள்ளது.
அல்லு அர்ஜுன் விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. இந்தச் சூழலில் அல்லு அர்ஜுன் இல்லத்தில் தாக்குதல் நடத்தியவர் ரேவ்ந்த ரெட்டியுடன் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அல்லு அர்ஜுன் இல்லம் தாக்குதல்:
முன்னதாக நேற்றைய தினம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த சிலர், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுன் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்று தாக்குதல் நடத்தினர். மேலும், புஷ்பா 2 திரைப்பட ஸ்பெஷல் ஷோவில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்து நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். இருப்பினும், நீதிபதி அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இடையில் தாக்குதல் நடத்தியவர்களின் பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியானது. அதில் அல்லு அர்ஜுன் இல்லத்தின் முன்பு தாங்கள் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தி வந்ததாகவும் வீட்டின் செக்யூரிட்டி தான் முதலில் தங்களைத் தாக்கி, மோசமாக பேசியதாகவும் இதன் காரணமாகவே அந்தச் சம்பவம் நடந்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications