தேர்தல் பரப்புரையில் தெலுங்கானா எம்பிக்கு கத்திக்குத்து! மர்ம நபரை சுற்றி வளைத்த பிஆர்எஸ் கட்சியினர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் மேடாக் எம்பியும் துப்பாக் சட்டசபை தொகுதியின் வேட்பாளருமான பிரபாகர் ரெட்டியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் துப்பாக் சட்டசபை தொகுதிக்கு மேடாக் எம்பி பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று தெலுங்கானாவில் தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் மர்ம நபர் வேட்பாளர் பிரபாகர் ரெட்டிக்கு கை குலுக்க சென்றார். பிரபாகர் ரெட்டியும் கை கொடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

இதில் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே கட்சி நிர்வாகிகளும் பிரபாகர் ரெட்டி ஆதரவாளர்களும் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நபரை சரமாரியாக தாக்கினர். அந்த மர்மநபரின் பெயர் ராஜு என தெரியவந்தது. கத்தியால் ஏன் குத்தினார் என தெரியவில்லை.

இதையடுத்து பிரபாகர் ரெட்டியை அவருடைய காரிலேயே கஜ்வெல்லில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி ஹரீஷ் ராவ் எம்பியை தொடர்பு கொண்டு பேசினார். தேவைப்பட்டால் பிரபாகர் ரெட்டியை ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications