இணைந்த கரங்கள்! துரை வைகோவிடம் மனம் விட்டு பேசிய ராகுல்காந்தி! தெலுங்கானாவில் 'நண்பேண்டா' நிகழ்வு!
ஹைதராபாத்: பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவிடம், பல்வேறு முக்கிய விவகாரங்கள் பற்றி ராகுல்காந்தி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கிய ராகுலின் பாத யாத்திரையில் துரை வைகோ கலந்துகொண்டார்.
ராகுல்காந்தியும் துரை வைகோவும் நாட்டின் நடப்பு அரசியல் நிலவரம், பாஜக அரசின் செயல்பாடு, மத அரசியல் என பல்வேறு விவகாரங்கள் பற்றி விறுவிறுவென நடந்து கொண்டே கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இணைந்த கரங்கள்
தேச ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இன்று காலை தெலுங்கானாவில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது துரை வைகோவை வாஞ்சையுடன் வரவேற்ற ராகுல் காந்தி, தனது பாத யாத்திரை நிகழ்விலும் அவரை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அதன்படி பல கிலோமீட்டர் தூரம் வரை ராகுலுடன் இணைந்து நடந்து சென்ற துரை வைகோ பாஜகவின் மத அரசியல் பற்றி எடுத்துக் கூறி வேதனைத் தெரிவித்திருக்கிறார்.

கவனமாக கேட்ட ராகுல்
துரை வைகோ கூறிய விவகாரங்களை எல்லாம் விறுவிறுவென நடந்துகொண்டே மிகவும் கவனமாக கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, பதிலுக்கு தமது கருத்துக்களையும் தெரிவித்தார். இதேபோல் துரை வைகோவை தன்னுடன் வந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ராகுல் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் சந்திப்பின் போது வைகோவின் உடல்நலம் பற்றியும் ராகுல் துரை வைகோவிடம் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நண்பர்களை போல்
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ராகுலும், துரை வைகோவும் பல நாட்கள் பழகி திரிந்த நண்பர்களை போல், எந்த பார்மாலிட்டியும் இல்லாமல் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே நடந்தது தான். நாட்டின் நடப்பு அரசியல் நிலவரம், பாஜக அரசின் செயல்பாடு, மத அரசியல், தமிழக அரசியல், என பல விவகாரங்கள் பற்றி இருவருக்கும் இடையே டிஸ்கஷன் நடைபெற்றிருக்கிறது.

மிகப்பெரிய தாக்கம்
கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய ராகுல், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய 4 மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானாவில் பாத யாத்திரை சென்று வருகிறார். ஆரம்பத்தில் ராகுலின் நடைபயணம் பெரியளவில் பேசப்படாத நிலையில், தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். பாரத் ஜோடோ யாத்திரையின் போது வழியில் பல்வேறு தரப்பட்ட மக்களையும் ராகுல் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications