வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைரதாபாத்தில் இரவோடு இரவாக வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வாக்குவாதம் வெடித்துப் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் வேலையில்லாத இளைஞர்களை போலீசார் கைது செய்வது ஏன்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பல லட்சம் இளைஞர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வேலை கிடைக்காததால் குடும்பம் நடத்துவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.

கைது
இதற்கிடையே ஹைதராபாத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை அந்நகர போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். வேலைக்குப் போகாமல் இருப்பது ஒரு குற்றமா.. இதற்கெல்லாமா கைது செய்வார்கள் என்ற கேள்வி நமக்கு வரலாம். இதற்கு வேறு ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.
காரணம்
அதாவது ஹைதராபாத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தாமதத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. தெலுங்கானா சட்டசபையை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதன் காரணமாகவே போராட்டத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலைக்குச் செல்லாத இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை இந்த போராட்டம் நடந்த சூழலில், புதன்கிழமை நள்ளிரவில் இந்த கைதுகள் நடந்துள்ளன.
கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இரண்டு லட்சம் வேலைகளை உருவாக்குவோம்.. வேலைவாய்ப்பு காலண்டர் வெளியிடுவோம்.. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 நிதி உதவி அளிப்போம் எனக் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்த சூழலில், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே இளைஞர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
இரவோடு இரவாக கைது
இருப்பினும், அங்கு ஆளும் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு இதில் மவுனம் சாதித்தே வருகிறது. இதனால் இளைஞர்கள் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.. இது சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்த காவல்துறை, இரவு நேரத்தில் விடுதிகள் மற்றும் நூலகங்களில் சோதனை நடத்தி பலரைக் கைது செய்தது. சிக்கட்பள்ளியில் உள்ள நகர மத்திய நூலகத்திலும் காவல்துறையினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது.
இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றபோது வாக்குவாதங்கள் வெடித்தன. அப்போது ஒரு இளைஞர், "நாங்கள் குற்றவாளிகள் அல்ல, உரிமையான வேலை கேட்கும் இளைஞர்கள். நள்ளிரவில் ஏன் குற்றவாளிகளைப் போல் எங்களைக் கைது செய்கிறீர்கள்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். சட்டமன்றத் தேர்தலில் உறுதியளித்தபடி, இரண்டு லட்சம் காலிப்பணியிட அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு காலண்டரை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தினர். மேலும், வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் ₹4,000 நிதி உதவி வழங்கக் கோரினர்.
தெலுங்கானா
தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கு வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து பிரச்சனையாக மாறி வருகிறது. ஒரு ஆண்டுக்கு இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என அங்கு ஆளும் காங்கிரஸ் அரசு உறுதியளித்திருந்தது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் வெறும் 16,978 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு 67,763 காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருந்தாலும், அதில் இதில் 50,785 பணியிட அறிவிப்புகள் முந்தைய பிஆர்எஸ் ஆட்சியின்போதே வெளியிடப்பட்டவை எனவும் சொல்லப்படுகிறது..












Click it and Unblock the Notifications